Tuesday, 12 February 2013

வீடுவரை உறவு. . .

" அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தல மேல்வைத்து அழும்மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"
- பட்டினத்தார்

Monday, 11 February 2013

பத்துமலை 2013. . .


1892ல் பத்துமலையில் முதன் முதலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. 1920ல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

ஒற்றையடிப் பாதையில் ஏறிச்சென்று மலைக் குகையில் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் போய் இன்று மூன்று வழிப்பாதையாக இந்த படிக்கட்டுகள் அமைகின்றன. போவதற்கும் வருவதற்கும் என இரண்டும், விழாக்காலங்களில் காவடிகள் போய்வர  நடுவில் ஒன்றும் என இந்த 272 இப்படிகளே பத்துமலையின் வளர்ச்சியினைக் காட்டுகிறது.



அடிவாரத்தில் இருந்து இந்த மலைக்குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. உடல் உபாதைக்குள்ளாகும் பலர் மேலே குகைக்கோயிலுக்கு வர சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரமுடியாமல் ஏங்குவோரும் நிறையவே உள்ளனர். இருதய நோயால் தாக்கப்பட்ட  நான், சில வருடங்களுக்கு முன்னால் படியேறி மலைமேலே சென்று முருகனை வணங்க முடியா நிலை எனக்கும் ஏற்பட்டதுண்டு.  ஆனால் இம்முறை எவ்வித சிரமுமின்றி 272 படிகளை கடந்துவிட்ட மகிழ்சியில் எடுத்துக்கொண்ட படம் இது.


272 படிகளைத்தாண்டி மேலேறி வரும் பக்தர்களுக்கு கண்குளிரும் விதமாக ஸ்ரீ சுப்ரமணியர் சிலை ஒன்று காட்சிதருகிறது.



இந்துக்களின் புனித தலமாக இருந்தாலும், மலேசிய அரசாங்காத்தால் அங்கிகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் வெளி நாட்டு  சுற்றுப்பிரயாணிகள் எப்போதும் வந்து இதன் அழகை ரசித்த வண்ணம் உள்ளனர். 

தமிழ் நாட்டில் இருப்பது போல புகைப்படம் எடுக்கக்கூடாதென கட்டுப்பாடு இங்கில்லை  என்பதால் பலரும் மகிழ்ச்சியாக இங்கே வந்து இறைவனை தரிசித்து நிழல் படங்களை எடுத்துச் செல்கின்றனர். தங்கள் நாடுகளில் உள்ள தம் நண்பர்களுக்கு அவற்றை காட்டி அவர்களும் இங்கு வர வழி செய்கின்றனர். நம் பத்துமலை அகில உலக புகழ் பெற்ற காரணங்களில் இதுவும் ஒன்று. அதிலும் விழாக் காலங்களில் அவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.


பத்துமலையின்  உச்சகட்டமாக அமைவது, இங்குள்ள மலை மேலிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் இடம்பெறும் பிரார்த்தனைகள்தான்.  எப்போதும் பக்தி மணம் கமழும் பாடல்கள் ஒலியேற்றப்பட்டு காலந்தவறாமல் பூஜைகள் செய்யப்படுகின்றன. அர்ச்சனைகளுக்கு 5.00 வெள்ளி வசூலிக்கப்பட்டாலும், சாதாரணமாக முருகப்பெருமானை வழிபட எந்தத் தடையும் இல்லை. 



ஆக உயரத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை முருகன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இதனைச் சுற்றி சுண்ணாம்புக்குகையின் இயற்கை வளர்சியை தடை செய்யாமல் அப்படியே விட்டிருக்கின்றனர். உதிரிப்பகுதிகளாக மேலிருந்து தொங்கும் சிறு சிறு மலைக் கட்டிகளின் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர் இங்கு சுற்றிப்பார்க்க வருவோர். அதுமட்டுமல்ல, இந்த இடத்தில் இருந்து மேல் நோக்கினால், திறந்த வெளியில் வானத்தைப் பார்க்கலாம். இதன் வழியாகத்தான் தூய காற்றும் வெளிச்சமும் இங்குள்ள மலைக்கோயில்களுக்கு கிடைக்கின்றன.



பத்துமலையின் இடப்பக்கம் இருக்கும் இடத்தில் 50 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், நின்ற கோலத்தில் தன் மார்பைப் பிளந்து அங்கு வீற்றிருக்கும்  ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியார் திருவுருவங்களை வெளிக்காட்டி அவர்கள்பால் தமக்கிருக்கும் பக்தியை புலப்படுத்துகிறார்.

 அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தக் கோயில் நவம்பர் 2001ல் திறப்புவிழா கண்டது.



இந்தியாவின் திருப்பதிக்குச் செல்ல இயலாதோருக்காக இங்கேயும்   ஸ்ரீ வெங்கடாச்சலபதி ஸ்வாமி அருள் பாலிக்கும் சன்னிதானமும் இருக்கிறது. 

 நமது 'பாவ்ஸ் டபுள்ஸ்' வலைப்பதிவுக்காக இப்படி ஒரு படம். 

வெளிநாட்டினரைக் கவரும் இன்னொரு அம்சமாக அமைவது படிகளின் இருபக்கமும் இருக்கும் 'மக்காவ்' வகை குரங்குகளே.  'ஆஞ்ச நேயா', 'ஹனுமானே'  என செல்லமாக அவற்றுடன் பழகினாலும், அவ்வப்போது அவை தங்களது மூர்க்கத்தனத்தையும் காட்டாமலில்லை. அவற்றைவிட கீழே அடிவாரத்தில் இருக்கும் ஆபத்தில்லாத புறாக்களே மேல் எனப் போவோரும் உண்டு. கும்பலாக தீனியை ருசிக்கும் அவற்றை திடீரென விரட்டிவிட்டு அவை ஒரே நேரத்தில் மேலெழுந்து பறப்பதை புகைப்படங்களாக எடுத்து ரசிக்கின்றனர்.

ஆக, பத்துமலை என்று சொன்னால், அடிவாரத்திலும், மலைமேலும் உள்ள தெய்வத்திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபட்டு, மற்ற கலை அம்சங்களையும் ஒன்று சேர கண்டு களித்துச் செல்வதில் பலரும் மனச் சாந்தியடைகிறார்கள்.

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கொம்மியூட்டர் சேவையும் பத்து மலை வரை இருக்கிறது.




தமிழில் சஸ்பென்ஸ் படங்கள். . . 1

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் புதுப் படங்களுக்கு மத்தியில் பழைய படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்து வைக்கும் ரசிகர்களும் நம்மிடையே உண்டு. அன்மையில் ஒரு நண்பர் பழையவற்றுள் 'சஸ்பென்ஸ்' படங்கள் பற்றி வினவினார். பல படங்கள் அப்படி உண்டு. அதில் பேய் படங்கள் தவிர, கொலைப் படங்களாகவும் பல வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

கொலை செய்து தப்பிப்பதும், தப்பிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பதும் என பலவித உணர்ச்சிக்குவியல்களாக தமிழ்ப் படங்கள் தந்திருக்கின்றன. இல்லாததை இருப்பதென்றும், இருப்பதை இல்லையென்றும் அடித்துச் சொல்லும் கதாபாத்திரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 

எனக்குப் பிடித்த சில திகில் படங்களை இங்கே தருகிறேன், உங்களுக்கும் பிடித்திருக்கும் என்கிற நம்பிக்கையில். பார்க்காதவையாக இருப்பின் குறுந்தட்டுகளில் கிடைக்கும் அவற்றை பார்த்து ரசிக்க இந்தச் சீனப் புத்தாண்டில் இதுவே நல்ல நேரம்.

"புதிய பறவை" - சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் இயற்கையான நடிப்பில் வெளிவந்த படம். பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒரு வித ஏக்கத்தில் சுற்றி வரும் சிவாஜி தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதை சொல்லி அவரின் முதல் மனைவி இறந்துவிட்டதாக முடிக்கிறார். மகிழ்ச்சியாக போகும் சில நாட்களில், இறந்ததாக அவர் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண்முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு அதிர்ச்சி.
புதிதாக பார்ப்போருக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.


இடம் பெற்ற பாடல்கள்:
1   சிட்டுக்குறுவி முத்தம் கொடுத்து

2   உன்னை ஒன்று கேட்பேன்

3   பார்த்த ஞாபகம் இல்லையோ

4   ஆஹா மெல்ல நட மெல்ல நட

5   எங்கே நிம்மதி எங்கே நிம்மதி



"அதே கண்கள்" - ஒரு குடும்பத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்க, கொலையாளி யாரென இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் சிறப்பாக இருந்தது இப்படம். கொலைகாரன் விட்டுச்செல்லும் துண்டு சுருட்டும், அவன் அங்கிருப்போர்களில் ஒருவன் என தெரிய வந்து ஒருவருக்கொருவர் சந்தேகத்தில் பார்த்துக்கொள்வதும் நன்றாகவே இருந்தது. கொலைகாரனை படத்தின் நாயகன் ரவிச்சந்திரன் பிடிக்க முயலும்போது அவன் கண்களை மட்டும் பார்த்துவிடுவதும் பின்பு அங்குள்ளோர் அனைவரையும் ஒவ்வொருவராக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும்  நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் காட்சிகள். நாகேஷின் நகைச்சுவையில் அவ்வப்போது சிரிக்கவும் இடமளிக்கும் விதம் காட்சி அமைப்புகள் இருந்தன.

 நல்ல பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இசை டி ஆர் பாப்பா.
1   பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி

2   சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்

3   என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் 
     சொல்ல வார்த்தை இல்லையே...

4   ஒஹ் ஒஹ் எத்தனை அழகு இருபது வயதினிலே

5   பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
     பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்

6   வா அருகில் வாரா தா உயிரைத் தா....



"யார் நீ?" - ஜெய்சங்கர், ஜெயலலிதா, ஆனந்தன் நடிப்பில் வந்த படம். வெள்ளை ஆடையில் ஜெயலலிதாவின் நடிப்பு, அவர் நடந்து போகையில் கேட்டின் கதவு தானே திறந்து கொள்வது, கார் கண்ணாடியில் தண்ணீர் துடைக்கும் வைப்பர் தானே வேலை செய்வது, முதலில் பார்த்த இடம் மீண்டும் வந்து பார்க்கையில் வேறு விதமாக தோன்றுவது என திகிலை பல வழிகளில் கூட்டியிருந்தனர் படமெடுத்தோர். ஜெய்சங்கர் ஒரு மருத்துவராக இளமை மிடுக்காக படம் முழுக்க வருவார்.

 "நானே வருவேன்..அங்கும் இங்கும்..." என ஆவி பாடுவதாக அருமையான ஒரு பாடலை சேர்த்திருந்தனர் இதில். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இப்பாடல் படத்தின் சிறப்பம்சம் என்பேன்.

1  என் வேதனையில்
    உன் கண்ணிரண்டும் என்னோடு
    அழுவதேன் கண்ணா...

2  முள்ளில் ரோஜா..துள்ளுதே ராஜா

3  பார்வை ஒன்றே போதுமே...
    பல்லாயிரம் சொல் வேண்டுமா...


"இதயக்கமலம்" - இறந்துவிடும் மனைவியை எரித்து முடித்து கவலையில் சோர்ந்திருக்கும்  ரவிச்சந்திரனிடம் " நான் தான் உங்கள் மனைவி " என கே. ஆர். விஜயா வந்து சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் தொடங்குகிறது. அருமையான வாக்குவாதங்கள். பார்ப்போரை எது உண்மை என தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய படமிது.

இதிலும் பல பாடல்கள் இனிமையாக ஒலித்தன:
1   மேலத்தெ மெல்லத் தட்டு மாமா...

2   நீ போகுமிடமெல்ல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

3   மலர்கள் நனைந்தன பனியாலே...

4   என்னதான் ரகசியமோ இதயத்திலே...

5   தோள் கண்டேன் தோளே கண்டேன்...

6   உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...


மேலும் சில படங்களை 2ம் பகுதியில் பார்ப்போம்...

Sunday, 10 February 2013

கான மயிலாட. . .

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி. . .

Saturday, 9 February 2013

சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள் . . .




சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் "எண்ணங்கள் ஆயிரம்" வலைப்பதிவின் வாழ்த்துக்கள்.

Friday, 8 February 2013

பழமை என்றும் இனிமை...



1984ல் சிலாங்கூர் டிரெட்ஜிங் பெர்ஹாட் எனுமிடத்தில் பணியில் இருந்தபோது எடுத்த படங்கள் இவை...

வாழ்வின் பல பரிமாணங்களைக் கடந்து வந்துவிட்ட இந்நேரத்தில் அவற்றை மீண்டும் எண்ணுகையில் இதழோடு இளமுறுவல் இன்னிசை பாடுகிறது.

வாழ்க்கைக் கணக்கு. . .