Thursday, 7 February 2013

பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. . .

இரு தினங்களுக்கு முன் என் பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை நேரிடையாகவும், தொலைபேசியிலும், கைபேசியிலும், மெஸ்ஸேஜிலும் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
" யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்... "

குடும்பத்தினரிடம் இருந்து பிறந்த நாள் பரிசாக பெற்ற 'சாம்சுங் எஸ்3' என்ட்ரோய்ட் கைபேசி, கையில் ஒரு கணினியாக. . .

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!!!

டாக்டர் அருள் . . .


மேலும் கீழும்... மருத்துவ சந்தேகங்களை தீர்த்து வைக்கும் டாக்டர் அருள் அவர்களுடனான நேர் காணலின் போது எடுத்த படங்கள்.


மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, அது ஒரு சேவை.  காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து தீர்த்து வைக்கும் அதே நேரம், ஒரு நல்ல மருத்துவர் மனித நேயத்தையும் வளர்க்கிறார், நோய் தாக்கும் முன் தேவையான தற்காப்பு பற்றியும் விளக்குகிறார்.

டாக்டர் அருள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர். வந்தபின் வருந்துவதை விட அதுவே சிறந்த மருத்துவம் என்கிறார்.

பல வித நோய்களின் அறிகுறிகளை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிவியலை ஒருவர் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என அடிக்கடி சொல்பவர்.

Visit to Dragon fruit Farm in Keluang, Johore




Monday, 4 February 2013

படித்ததில் பிடித்தது...

ஐயம் தெளிக எனும் தொடரில் சித்தாந்தச் செல்வர் முனைவர் நாகப்பன் அறுமுகம் அவர்களின் "எல்லாம் இறைவன் செயலா ?" என்ற தலைப்பின் கீழ்,  மக்கள் ஓசையில் வெளிவரும் தொடரில் 133ம் பாகம்.


மா. சுந்தரபாண்டியன், பினாங்கு
ஐயம் : எல்லாம் இறைவன் செயல் என்றால் உலகத்தில் ஏன் தீமைகளும் துயரங்களும் இருக்கின்றன?


தெளிவு :  எல்லாம் மனிதல் செயல் என்றால் உலகத்தில் தீமைகளையும் துயங்களையும் மனிதன் ஏன் உண்டாக்கிக் கொண்டான்?  நல்லதெல்லாம் அவன் செயல் என்றால் தீயதெல்லாம் கடவுள் செயல் என்று கூறுவது நியாயமாகாது அல்லவா?  நல்லது கெட்டது இரண்டுக்கும் மனிதன் பொறுப்பேற்றுக் கொண்டால் கெட்டதை அவன் தெரிந்தே உருவாக்குகிறான் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

எவ்வளவு நல்லவனுக்கும் எவ்வளவு அறிவாளிக்கும் துன்பம் வருகிறது. இதனை அவர்களே உண்டாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

எந்த மனிதனும் இன்பத்தை அனுபவிக்கவே விரும்புவான். துன்பத்தை விரும்ப மாட்டான். அப்படியானால் துன்பத்தை அவனே உண்டாக்கிக் கொண்டான் என்று சொல்ல முடியாது. துன்பத்தை அவன் உண்டாக்கிக் கொள்ள மாட்டான் என்றால் இன்பத்தையும் அவன் உண்டாக்கி கொள்ள மாட்டான் என்றுதான் முடிவாகும்.

மனிதன் தன் அறிவாலும் முயற்சியாலும் இன்பத்தை உண்டாக்கிக் கொள்ள வல்லவன் என்றால் தனக்கு வரும் துன்பத்தையும் இன்பமாக மாற்றிக் கொள்வதற்கு அதே அறிவையும் முயற்சியையும் அவன் பயன்படுத்திக்கொள்ள முடியும். போதுமான அறிவு இல்லை, போதுமான முயற்சி செய்யவில்லை, அதனால் முடியவில்லை என்றால் ஏன் இல்லை?

அறிவு, முயற்சி, தன்னம்பிக்கை, என்றெல்லாம் பேசுவோரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தங்களின் அறிவு, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பால் வேறு ஏதோ ஓர் ஆற்றால் தங்களை கட்டுப்படுத்துவதாக எண்ண வேண்டியுள்ளது.

இந்த ஆற்றலைத்தான் சமயங்கள் வினை அல்லது கர்மம் என்று கூகின்றன. கர்மம், வினை என்பதெல்லாம் பொய் என்று சொல்ல முடியவில்லை. இறந்த காலத்தில் செய்த முயற்சிக்கு நிகழ்காலத்தில் பயன் அனுபவிக்கிறோம் என்பதைக் கடவுள் மறுப்பாளரும் கூறுகின்றனர். செய்த முயற்சியை வினை என்றும் பெற்ற பயனை வினையின் பயன் என்றும் கடவுள் ஏற்பாளர் கூறுகின்றனர்.

இதுதான் வினைக் கொள்கையின் சுருக்க விளக்கம்.  இறந்த காலம் என்பது இந்த பிறப்பு தொடங்கும் போது தொடங்கியது என்று கூற முடியாது. அப்படிக்கூறினால் பிறக்கும்போதே ஏழையாய், பணக்காரனாய், ஊனமாய் பிறப்பது எதன் பயனால் வந்தது என்பதைக் கடவுள் மறுப்பாளர் விளக்க முடியாது. அது கடவுளின் விருப்பம் என சமயவாதிகள் கூறுவதும் சரியல்ல.

கடவுள் தன் விருப்பம் போல சிலரை ஏழைகளாகவும் சிலரைப் பணக்காரர்களாகவும் சிலரை நோயாளிகளாகவும் ஊனமாகவும் படைப்பார் என்றால் அவர் நீதிமானாகவும் அறவோனாயும் இருக்க முடியாது.

இந்தத் குழப்பங்களை சரி செய்வதே சித்தாந்த சைவம் சொல்லும் வினை கொள்கை.  இறந்த காலம் என்பது இந்தப் பிறவிக்கும் முன்னால் பிறந்த பிறவிகளையும் உள்ளடக்கியதே ஆகும் . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் வருகிறது என்பதால் இந்தப் பிறவியில் செய்த செயலுக்கு மட்டுமல்ல இதற்கு முன் பிறவிகளில் செய்த செயல்களுக்கும் பயன் வரும் என்பதை பகுத்தறிவால் ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

ஒருபிறப்பில் உயிர் உடம்பை விட்டு நீங்கும்போது அப்பிறப்பில் செய்த வினைகள் உயிரையும் உடலையும் விட்டு நீங்கிவிடும். ஒரு பிறப்பில் செயத வினகளுக்கு உரிய பயனை அப்பிறப்பிலேயே உயிர்கள் அனுபவிப்பதில்லை.

இப்பிறப்பில் கொடுமைகள் பல செய்த ஒருவன் நோய் நொடியின்றி ஆனந்தமாக வாழ்ந்து இறப்பதைக் காணுகின்றோம். எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்தவன் படாத பாடு பட்டு இறப்பதையும் காண்கிறோம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்?  இறந்த காலம் பிறவிகளைக் கடந்து போகிறது என்றாலும் ஏதேனும் ஒரு பிறவியில் செய்த செயல் அல்லது வினயின் பயனை பின்னர் வரும் ஏதேனும் ஒரு பிறவியில் அனுபவித்தே ஆக வேண்டும்.

பல பிறவிகளில் செய்த வினைகளின் தொகுப்பைச் சஞ்சிதம் என்றும் இப்பிறவிக்கு அனுபவிக்க வேண்டிய வினையை பிரார்த்தம் எல்லது ஊழ்வினை என்றும் ஊழ்வினையை அனுபவிக்கும்போது உயிர்கள் செயல்படுவதால் வரும் புதிய வினை ஆகாமியம் அல்லது ஏறுவினை என்றும் சொல்லப்படும்.

இனி, மற்றோர் உண்மையையும் புரிந்து கொள்ளவேன்டும். பொருள்களில் அறிவுப்பொருள்கள் அறிவற்ற பொருள்கள் என இரு வகை உண்டு.வினை அறிவற்ற பொருள். அதாவது சடப் பொருள். சடப்பொருளாகிய வினைதானே  சென்று அதனை செய்த உயிரைப் பொருந்தாது. ஊழ் வினை உயிரின் சென்று பொருந்தும் வரை உயிருக்கு ச் செயல் ஏதும் இருக்காது என்பதால் உயிர் தானே சென்று தான் செய்த வினையில் பொருந்தாது. வினை சடம். அது தானே செயல் படாது. ஊழ்வினை இல்லாமல் உயிர் செயல்படாது என்றால் உயிருக்கு ஊழ்வினையக் கொண்டு சேர்ப்பது யார்?  இறைவனே உயிர்களுக்கு வினையைக் கொண்டு சேர்க்கிறான்.

அவனுக்கென்ன வந்தது இதைச் செய்ய?

 உயிர்கள் செயல்பட வேண்டும். செயல்பட்டால் தான் பொய்ப்பொருள்களை மெய்ப்பொறுள் என்று கருதி வாழும் உயிர்கள் பொய்ப்பொருள்களை பொய்ப்பொருள் என்று உணர்ந்து அவற்றை விட்டு நீங்கி மெய்ப்பொருளை அறிந்து அதில் சாரும். உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உலகியல் சிற்றின்பங்களும் பொய்ப்பொருள்களின் சார்பினால் வருவன. அவற்றை விட்டு நீங்கினால் மட்டுமே மெய்ப்பொருளின் சார்பு உயிருக்குக் கிட்டும். இந்தப் பக்குவத்தை உயிர்கள் அடையும் பொருட்டு இறைவன் உலகை படத்து உயிர்களுக்கு உடம்புகளைப் படைத்து உலகில் அனுபவிக்கத் தக்க போகங்களைப் படைத்து உயிர்களுக்கு வினைகளையும் கூட்டிச் செயல் படுத்துகிறான்.  உயிர்களின் பொருட்டு இறைவன் என்னென்ன செய்தான்,  செய்கிறான் என்பதையெல்லாம் தொகுத்துப் பாருங்கள். இறைவன் நடத்தும் பள்ளியில், உயிர்கள் பாடம் படிக்கின்ற மாணவர்களாய் இருப்பதை உணரலாம். உயிரின் செயல்கள் யாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லாம் இறைவனின் செயல்களோடு தொடர்புடையவையாய் இருப்பதால்தான் எல்லாம் இறைவன் செயல் என்று அவனை உணர்ந்த ஞானியர் கூறினர்.


 நன்றி : மக்கள் ஓசை

நடைபயிற்சிக்கு நல்ல இடம் ஜுக்ரா மலை. . .

( ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மலைக்குச் சென்று அடிவாரத்தை வந்தடைந்த களைப்பில் நான் )
ஒரு நாள் மாலை, விறு விறு நடையாக  ஜுக்ரா மலை ஏறி திரும்பியவுடன் எடுத்த படம் இது. ஆரோக்கியமானவர்களுக்கு தகுந்த நடைபயிற்சி  மையமாக தெரியும் இம்மலை, பெண்களுக்கும், ஆரோக்கியம் தளர்ந்த சிலருக்கும் முக்கி முணகி சென்று திரும்பும் அம்சமாகிவிடுகிறது.
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சியாக அமைவது இது போன்ற மலைகளில் ஏறி இறங்குவதும் ஒன்றாகும். 

ஆரம்பத்தில் இங்கு நடை பயிற்சிக்கு வரும் போது கை கால்களில் வலி வரத்தான் செய்தது. ஆனால், சில நாட்களில் அந்த வலி மறைந்துவிட்டது. இப்போது மெது நடை விரைவு நடையாக மாறிவிட்டதால் பயிற்சி முடிந்த சில நிமிடங்களுக்கு வழக்கமான களைப்பை உணருகிறேன், அவ்வளவுதான். அதிலும் காலையிலும் மாலையிலும் இங்கே பயிற்சிக்கு வருவோரை பார்த்தால், நமது உடல் வலி பெரிதாக தோன்றுவதில்லை. மாறாக அடிக்கடி வர ஆர்வம் ஏற்படுகிறது.




வாலிபம் வயோதிகத்தின் முன்னோடி...

(  இன்றைய இளம் தம்பதிகள் அழகாக தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், அனர்த்தமாக பாதியிலேயே முடித்துக் கொள்கிறார்கள்... )

வாழவேண்டிய இளம் வயதில் வாழ்க்கையை தொலைத்து விட்டு வயதான பின்னர் அதை தேடுவதென்பது காலம் கடந்த பின் நமக்கு வரும் ஞானோதயம் ஆகும். உண்மையில் அதனால் மனச் சோர்வே அதிகரிக்கும்.

முதுமைக்குத் தேவையானவற்றை இளமையிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கணவன் மனைவிக்கிடையே தோன்றும் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் அடங்கும். வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர். அதை விளங்கிக் கொள்வது இருவரின் பொறுப்பு. இருவரின் குற்றம் குறைகளும், பாசம் பரிவுகளும் அந்தரங்கமாக அலசப்பட்டு ஆழமான, ஆத்மார்த்தமான உறவினால் பிணைக்கப் பட வேண்டும். பெரியோர் சொல்லும் பொன்னான வார்த்தைகள் இவை. இதில் இருக்கும் உண்மையினை உணர்ந்து செயல் படுதல் குடும்பம் செழித்தோங்க நாம் எடுக்கும் முன்னேற்றகரமான வழியாகும்.

சில இளம் தம்பதிகள் எப்போதும் சண்டையிட்டு மனக்கஷ்டத்திலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதபோது வாழ்க்கை எப்படி இனிக்கும்.

ஏட்டிக்குப் போட்டி என வாழ்க்கையை வாழத் தொடங்கினால், மிஞ்சுவது என்னவென்பதை அவர்கள் எண்ணத் தொடங்கவேண்டும். காரணம் இப்போது வெறுப்பாக தோன்றும் வாழ்க்கை வயதான பின்னர் வேதனையாகிவிடும்.

பல புதுத் தம்பதிகளும் இவ்விதமே பட்டும் படாமலும் தங்களின் இனிய வாழ்க்கையை அலட்சியமாக வாழ்கின்றனர். எதிர்கால வாழ்க்கைக்கு முதலீடு செய்ய வாலிபமே ஏற்ற பருவம்.

" இப்போது அடித்துக் கொள்வோம், பின்னர் சேர்ந்துக் கொள்வோம்" என்பது அளவோடு இருந்தால் சரிதான். இல்லையேல், அந்திம காலத்தில் வாழ ஆசை வந்தாலும் வயோதிகம் வழி வகுக்காமல் போய்விடும் ..



Friday, 1 February 2013

கிள்ளான் துறைமுகம். . .

 ( இப்போதைய கிள்ளான் துறைமுகத்தின் படம்.  அருகில் இருக்கும் தீவுகளுக்கும் இன்டோனீசியாவிற்கும் இடையிலான பயணங்களே இங்கு தற்போது  மேற்கொள்ளப்படுகின்றன ).

தமிழ் நாட்டிலிருந்து  மலேசியாவிற்கு வந்த நமது முன்னோர்கள் பினாங்கில் உள்ள துறைமுகத்தின் வழியும் கிள்ளான் துறைமுகத்தின் வழியும் தண்ணீர் கப்பல்கள் மூலம் வந்திறங்கினர்.

அந்த கப்பல்களுக்கு ரஜுலா, மெட்ராஸ் என அழகிய பெயர்களும் இருந்ததை நான் அறிவேன்.

அறுபதுகளின் முடிவில், உறவினர்கள் வந்து போகும் போது எனது தந்தை என்னையும் உடன் அழைத்து வருவார் இங்கு. சிறு துரும்புகளாக பட்ட அன்றைய எனது நினைவுகள் காலம் மாற மாற பெரும் பாறைகள் போல் மனதில் பதிவாகிவிட்டதை அறிகிறேன். அன்றைய நடப்புகளில் பல இன்று சரியான முறையில் வரலாற்றுக் குறிப்புகளில் இடம் பெறவில்லை எனும் வருத்தம் எனக்குள் உண்டு.

சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய கட்டடங்கள் இப்போது புதுக்கப்பட்டு புதியவைகளும் கட்டப்பட்டு வருகின்றன இங்கு.

கிள்ளான் துறைமுகம்  பல நாடுகளுடனான  வர்தக தொடர்பிலும் வெற்றிபெற்ற இடமாக 1990 முதல் திகழ்ந்து வருகிறது. வடக்கு துறைமுகம், மேற்கு துறைமுகம் என இரு பெரும் துறைமுகங்கள்  மலேசியாவின் ஏனைய துறைமுகங்களோடு நாட்டின் வளர்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன.