Showing posts with label kkkannan. Show all posts
Showing posts with label kkkannan. Show all posts

Saturday, 13 August 2011

இதய நோய்...

இதய நோயை கட்டுபடுத்த....,
---------------------------------------------------

 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு
நம்மிடையே இல்லை.
ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் .
இதய நோய் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.

 இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்!



இதயம்
------------------

மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
 நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
 இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம்.
கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைப் பயன்படுத்திவிட்டு, கார்பன்டைஆக்ஸைடை வெளியிடுகிறது. இந்த அசுத்தமான ரத்தம் மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து இதயம் துடிப்பதன் மூலம் நுரையீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

இப்படித் தொடர்ச்சியாக இதயத்தின் வழியே ரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.


இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன.  இவைதான், தேவையான நேரத்தில் ரத்தத்தை சரியான பாதையில் இதயத்துக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இதயம் சரியாகச் செயல்பட, பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியான முறையில் உருவாகியிருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் சரியான நேரத்தில் வால்வுகள் திறந்து ரத்தத்தை வெளியேற்ற முடியும். வால்வுகள் மூடிய பிறகு கசிவு இல்லாமலும் இருக்கும்.

துடிப்பு
----------------

தாயின் கருவறையில் ஆறாவது வாரத்தில் தொடங்குகிறது குழந்தையின் இதயத் துடிப்பு.

சராசரியாக இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கிறது.
வயது, பாலினத்துக்கு ஏற்ப இதயத் துடிப்பின் அளவில் மாற்றம் ஏற்படும். இதயம் சுருங்கி விரிவது ஒரு தொடர் செயல்முறை. இதயம் சுருங்கும்போது இதயத்தின் வென்ட்ரிக்கிள் சுருங்குகிறது.
இதனால் ரத்தமானது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.
இதயம் விரிவடையும் போது இதய அறைகள்  மீண்டும் ரத்தத்தால் நிரம்புகின்றன.

 மின் பாதை
----------------------

இதயம் தானாகத் துடிப்பது இல்லை.
அது இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை.
இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் ‘சைனஸ் நோட்’.
 இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும்,

அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதை சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதய நோய்கள்
-----------------------------

1. பிறவியிலேயே ஏற்படுவது (congenital),

2. பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired)

பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே, குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுகிறது.

இதய நோய்களை ரத்தக் குழாய் நோய்கள், இதய ரிதம் பிரச்னைகள் (அரித்மியா) மற்றும் பிறவிக் குறைபாடு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக, இதய ரத்தக் குழாய் (கார்டியோவாஸ்குலர்) பிரச்னையால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, இதய நோய்கள் என்று அழைக்கிறோம்.

ரத்தக் குழாய் குறுகி அல்லது அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதம் ஏற்படுவதையே கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்கிறார்கள்.
தவிர, இதயத் தசைகள் அல்லது வால்வு பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றாலும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான இதய நோய்களை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்.

சிகிச்சைகள்
----------------------------

இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு, தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
ஆரம்பநிலைப் பாதிப்பு என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உங்கள் இதயம் கெட்டியாகிவிடும்.
 சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தாண்டி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து எந்த மாதிரியான அறுவைசிகிச்சை என்பதை முடிவு செய்வார்கள்..

 தவிர்க்க எளிய வழிகள்:
-------------------------------------------

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பின்பற்றுவதன் மூலம் நாம் இதய நோயில் இருந்து மீளலாம். கெட்ட கொழுப்பு உடலில் சேரவிடாத அளவு பார்த்துக்கொண்டால் இதய நோய் வராமலேயே கூட நம்மால் தவிர்க்க முடியும்.


- இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது....

Wednesday, 3 August 2011

எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 1

கவிஞர் வசனங்கள் எழுதிய
 எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

 கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

 1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

 இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

 1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

 ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

 அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

 1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

 இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

 இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

 இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

 அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

 இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

 இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

 எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

 இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

 தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

 தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

 அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

 காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

 அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

 “தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

 பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

 முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

 இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

 1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

 நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
 மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!

 கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

 “நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

 கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

 அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

 வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

 ‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

 கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

 இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

 நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

 தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

 நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

 படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!