Wednesday, 10 July 2013

திருமணப்பதிவு...

பெண்கள் பல விதங்களில் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.  அனுபவமும்  திறமையும் இல்லாதவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளில்  சிக்கி, திக்கு முக்காடுகிறார்கள். சிலர் மூழ்கியும் விடுகிறார்கள்.

ஒன்றைப்பற்றி தெரியாவிடினும் தெரிந்தோரிடம்  விளக்கம் பெற்ற பின் முடிவெடுப்பது சிறந்த செயலாகும். இதில் ஆண் பெண் பேதம் இல்லை. ஆயினும் ஆண்கள் பொதுவாக கூச்சப்படுவதுமில்லை, எதையும் ரகசியம் என மறைத்துச்   செய்வதுமில்லை. தன்னிச்சையாக முடிவெடுத்து பிரச்சினைகளில் வீழ்வதில் இன்னும் பெண்களே முன்னனியில் இருக்கிறார்கள். மலேசிய இளம் பெண்கள் பிரச்சினை பெரியளவில் சமூகப் பிரச்சினையாக உருவெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

திருமணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்பது நம் நாட்டுச் சட்டம். திருமணம் புரிந்து கொள்ள விழைவோர் தங்களின் எண்ணத்தை தேசிய பதிவிலாகாவில் வழங்கப்படும் பாரத்தில் பூர்த்தி செய்து பொதுமக்களின் பார்வைக்கு 21 நாட்கள் வைக்கப்பட்டு, பின்னரே திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்பது அரசாங்க விதிமுறைகளில் ஒன்று.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா?

இல்லை....
இன்னும் பலருக்கு இந்தச் சட்ட விதிகள் தெரிந்திருக்கவில்லை. அல்லது தெரிந்தும் தெரியாததுபோல தங்களின் சுய நலத்துக்காக நடந்து கொள்கின்றனர்.

அன்மையில் மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் இது பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒரு வருடத்துக்குப் பின் தன்னிடம் வந்து அழுது புலம்பியதாக கூறினார்.

"ஏன்?"

நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத்தான் நானும் அவரிடம் கேட்டேன். 'அர்ச்சனைத் திருமணம்' என செய்துகொண்டு ஒருவருடம் தன்னுடன் வாழ்ந்த அவர் இப்போது வேறு எங்கோ சென்றுவிட்டார்' என வருந்தினாறாம் அந்தப் பெண்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம்.

இதற்கு யார் பொறுப்பு...?

சாஸ்திர சம்பிரதாயம் பார்ப்போர் ஏன் சட்டம், பாதுகாப்பு என பார்க்க தவறிவிடுகின்றனர்...?

பலரையும் சாட்சிக்கு அழைத்து வீட்டிலுள்ள பெரியோர் ஏற்று நடத்தும் திருமணங்கள் பொதுவில் நல்லவிதமே தொடர்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு பிழையெனப் படலாம். ஆயினும், இப்படி ஒரு சிலரைக்கொண்டு முடியும் திருமணங்கள் பலவும் தேக்க நிலையில், இப்பவோ அப்பவோ என்பது போல இடித்துக்கொண்டும் முறைத்துக்கொண்டுமே காலத்தை கடத்துகின்றன. "எப்போது முறிந்துவிடுமோ" எனும் ஐயம் உடனிருப்போருக்கு நிச்சயம் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படிப்பட்ட திருமணங்களைப் பார்த்திருப்போம்.

அதுபோல ஒன்றுதான் நண்பர் சொல்லும் இதுவும்.

முறைபடுத்தப் பட்ட, பதிவு செய்யப்பட்ட கோயில்களில் மட்டுமே திருமண பதிவதிகாரிகள் இருக்கின்றனர். எல்லாக் கோயிலகளிலும் அல்ல.

தமிழ் நாட்டிலிருந்து வரும் அர்ச்சகர்களுக்கு இங்குள்ள சட்டம் சரிவரத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திருமணச் சான்றிதழ் இருந்தால்தான் திருமணம் செய்து வைப்போம் என அவர்கள் கூறியிருக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தினர் இதற்கு முன்னுறிமை கொடுத்து சான்றிதழ் இல்லையேல் கோயில் வளாகம் இதுபோன்ற பயன்பாட்டுக்கு தரப்பட மாட்டாது என்றிருக்க வேண்டும். ஆனால் சில கோயில்களில் நடப்பதென்ன?

திருமணச் சான்றிதழை நண்பரிடம் கேட்டு வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் ஒரு கோயில் அர்ச்சகர். நண்பர் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறவர். கோயிலுக்கு அடிக்கடிச் செல்வதால் இவரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.

 திருமணப் பதிவுகள் தேசிய பதிவிலாகக்களில் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன. அவ்விலாகவின் பிரதிநிதிகளாக சில திருமண கவுன்சிலர்களும் ஆலோசகர்களும் நியமிக்கப்படுகின்றனர். வேறு யாரும், அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும்கூட இதுபோல சான்றிதழ்களைக் கொடுத்துவிட முடியாது. இதுவும் அர்ச்சகர் தவறல்ல, நிர்வாகத்தினர் தவறு. தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் கோயிலை நிர்வகிக்கும் குழுவில் ஒருவர் இதுபோன்ற செயல்களுக்கென  பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

சமூகப்பிரச்சினைகளைக் களையவும், சீர்கேடுகளைக் தவிர்க்கவும் ஏற்படுத்தப்பட்டதே "திருமணப்பதிவு" எனும் சட்டமாகும். குடும்பப் பாதுகாப்பு மூன்னிறுத்தப்பட்டு, ஆண் பெண் இருவருக்குமான கோட்பாடுகள் முறைபடுத்தப்படுகிறது. இதனால், திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையும் இருவரும் எந்தவித சந்தேகமுமின்றியும், அச்சமின்றியும் தங்களின் வாழ்வினை மகிழ்ச்சியாக துவங்கலாம்.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையிலும் அன்பிலும் மட்டுமல்ல, சட்டப்பூர்வமாகவும் சரி பாதியாகிறார்கள் என்பதே திருமணப் பதிவுகளில் சொல்லப்படுகின்ற கருத்து. இவற்றை மீறிய தவறுகள் கண்டிக்கப்படுகின்றன, தவறுவோர் தண்டிக்கப்படுகிறார்கள்.

தனிப்பட்ட ஒருவருக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் நிறந்ததே இந்த திருமண பதிவுச் சட்டம்.

அர்ச்சனைத் திருமணம் என்பது இப்போது பரவாலாக நடைபெற்று வருகின்றது. நான் பார்த்த ஒரு திருமணம் இது.  மணமகனுக்கு நான்கு பேர், மணமகளுக்கு நான்கு பேர். மொத்தத்தில் எட்டு பேர்தான். இரண்டு கார்களில் வந்தனர். அர்ச்சகர்  மந்திரங்கள் ஓதி மணமுடித்து வைக்க  எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே.

"திருமணம்" எனும் ஒன்று நடந்து முடிந்துவிட்டது.  எந்தச் செலவும் இல்லை.... 'பாக்கேஜ்" எனும்படி இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். காரணம், வந்தவர்கள் "எதுவும் கொண்டுவரவுமில்லை, கொண்டுசெல்லவுமில்லை.

" வாழ்க்கையைத் தொடங்க இப்படியும் ஒரு சுலபான வழி இருப்பதை அன்று தெரிந்துகொண்டேன்.

செலவெனக்கருதினால், அனைத்தும் செலவுதானே....?

பல கேள்விகள் எண்ணத்திரையில் ஓடுவதை உணரமுடிந்தது.

 "திருமணத்தை ஏற்று நடத்தும் கோயில்கள் மலேசிய கோயில்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டதா...?  திருமணத்தை ஏற்று நடத்த ஒப்புக்கொள்ளுமுன் மணமக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கானப் பதிவுச் சான்றிதழ் காட்டப்பட்டதா...?  கோயிலுக்கான நகல் தரப்பட்டதா...?  அர்ச்சனைத் திருமணம் என ஏற்பாடு செய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா...?   உற்றார் உறவினர் இல்லாததன் பின்னனி என்ன....?  பதிவுக்கு விண்ணப்பித்தப்பின் காத்திருக்க வேண்டிய 21 நாட்கள் எனும் காலக் கெடு முடிவடைந்ததா..?" இப்படி பல கேள்விகள் மனதில் ஓடி மறைந்தன.

முறைப்படி பதிவு செய்யப்படாத திருமணங்கள் பல வித சந்தேகங்களை எழுப்புகின்றன. இருவரில் ஒருவர் இடையிலேயே விட்டுப் பிரியலாம், ஏற்கனவே திருமணம் ஆனவரா எனத் தெரியாது, பிரச்சினை என வரும்போது, சொத்துக்களை பிரித்துக்கொள்ளும் சிரமங்கள் பூதாகாரமாகிவிடும், பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாவார்கள்...பள்ளியில் பதிவதிலிருந்து அடையாள அட்டை எடுப்பது வரை பலவித இன்னல்களை எதிர் நோக்க நேரிடும். 

வாழ்க்கை என்பது அவசரத்தில் தொடங்கி ஆர அமர, ஆசுவாசமாக சிறமப்படுவதல்ல. அது அன்பில் துவங்கி, பண்பில் வளர்ந்து, பல பரிமாணங்களை கடந்து செல்வது...


Monday, 8 July 2013

கடல்புறா - முன்னுரை

கடல்புறா எனும் சரித்திர நாவலுக்கு  அந்த நூலின் ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின் முன்னுரையினை இங்கே பதிவிடுவதில் மகிழ்கிறேன். உண்மையில் ஒரு படத்தினைப் பார்ப்பதைவிட அப்படம் எப்படி எடுக்கப்பட்டது என பார்ப்பது இன்னும் சுவையானதாகும். தி மேக்கிங் ஒஃப்,  'எப்படி படம் எடுத்தார்கள்' என ஒரு இணைப்பும் இப்போது படத்துடன் வருவது வழக்கமாகிவிட்டது.

அதே போல, கடல்புறா எனும் நாவலை விட அது உருவாக காரணமாக இருந்த சம்பவங்கள் அதன் முன்னுரையில் ஆசிரியர் அழகுபட விவரித்திருந்தார். பழைய சரித்திர சம்பவங்கள் தான் என்றாலும், பல விசயங்கள் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றன. கலிங்கம், கடாரம் போன்ற நமக்குச் சம்பந்தம் உள்ள வார்த்தைகளைக் கண்டு மலேசியர்களாகிய நாம் எவ்வளவு இழந்து விட்டோம் என எண்ணி  நம்மை வியக்க வைக்கிறது அவரின் இந்த முன்னுரை. நாவலை படிக்க இதுவே இன்னும் சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தருகிறது.

1974ல் குமுதம் வார இதழில் படித்து மகிழ்ந்த அந்த நாவலுக்கு கதாசிரியர் எழுதிய "முன்னுரை'யினை இனி அப்படியே இங்கே படிக்கலாம் வாருங்கள்.

 கடல்புறா -  
ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின் முன்னுரை

 இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள 'குமுதம்' பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்த 'கடல் புறா' முற்றுப்பெற்றதும் அப்பத்திருக்கைக் காரியாலயத்திற்கு வந்த ஏராளமான கடிதங்க்ளில் ஒன்றை எழுதியவர் அதைக் "காவியப் புறா" என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு விசயத்தில் அது உண்மை. ஒரு பெரும் காவியத்தின் அளவுக்கு நீண்டுவிட்டது "கடல்புறா".  மூன்று ஆண்டுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக இக்கதை குமுதத்தில் வெளிவந்தது.  இக்கதையை எழுத ஆரம்பித்தபோது மூன்று வருடம் ஓட்டும் உத்தேசம் இல்லை எனக்கு. ஆசையும் அவசியமும் கதையை நீட்டிவிட்டது.

தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சி நூல்களைப் படித்தபோதும், கல்வெட்டுக்களப் பற்றிய ஏடுகளைப் புரட்டியபோதும், கடல் கடந்த தமிழர்களப் பற்றிய குறிப்புகள் என் மனதில் ஆழப் பதிந்தன.  திரும்பத்திரும்ப அவற்றில் காணப்பட்ட கடாரம் என்ற சொல்லைப் பற்றிப் பல நாட்கள் சிந்தித்தேன். ' நல்ல யந்திர வசதியுள்ள இக்காலத்திலேயே கப்பல் பயணம் கஷ்டமாய் இருக்க, எந்த வசதியுமிள்ளாத காலத்தில் பழந்தமிழர்கள் எப்படி கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள்?  ராஜேந்திர சோழனும், மற்ற பிற்காலச் சோழர்களும் எங்கோ இருக்கும் கடாரத்துக்கு மரக்கலங்களைக் கொண்டு சென்று எப்படிப் போர் புரிந்தார்கள்?' என்ற கேள்விகளும் அடிக்கடி சிந்தனையில் எழுந்தன, ஆகவே அந்தக் காலத்துக் கடல் வாணிபம், கடல் போர், இவற்றைப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.

ஆராய்ச்சி சுலபமாயில்லை. தமிழில் கிடத்த விஷயங்கள் சொற்பமாயிருந்தன. 'அந்தக் காலத்தில் எத்தகைய கப்பல்களைக் கட்டினார்கள்? எத்தனை விதக் கப்பல்கலைக் கட்டினார்கள்? அவற்றின் உபயோகம் என்ன?' என்பதற்கெல்லாம் பல ஆங்கில நூல்களையும் வடமொழி நூல்களையும் பார்க்கவேண்டியதாயிற்று.  போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு" என்ற மரக்கல அமைப்பு நூல்களைப் பற்றிய குறிப்புக்களைப் பேராசிரியர் ராதாமுகுத் முகர்ஜி தமது 'இந்தியன் ஷிப்பிங்" என்ற நூலில் தந்திருக்கிறார்.  அந்தக் குறிப்புகள் மரக்கல அமைப்பைப் பற்றி எனக்குப் பல சூட்சுமங்களை விளக்கின.  பிறகு கடாரத்தின் சரித்திரம், சைலேந்தர்களின் வம்சாவளி அவர்கள் வரலாறு முதலியவற்றை டாக்டர் மஜும்தாரின் 'ஸ்வர்ணத்வீபம்" என்ற நூலிலிருந்தும், வீரராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட கடாரப் போரப் பற்றிய சில குறிப்புகளை திரு. நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் எஸ். கிரிஷ்ணசாமி அய்யங்கார், திரு. பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்கார் இவர்கள் வரலாற்று நூல்களில்லிருந்தும் எடுத்துக் கொண்டேன்.  

மேல் கூறிய நூல்களிலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்கள் வருமாறு :

" முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அனபாயன் கி.பி. 1063வது வருஷத்திலிருந்து 1070ம் வருஷம் வரை
ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலை நிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலவன் பெயர் 'தேவகுலோ." இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும்.

இந்தத் தகவல்களிலிருந்தும் ராஜேந்திர சோழனின் சல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும் பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வசகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கட;ல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்கலைப் படித்தேன். அவற்றைப் படித்த பின்னர் ஏற்பட்ட வியப்பு அல்ப சொல்பமல்ல. தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றது. எத்தனை அபாயங்களை தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தன.  இந்த அறிவையெல்லாம் எனது வாகசர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் "கடல் புறா."

"கடல் புறா"வின் கதையைப் புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் 'கலிங்கத்துப் பரணீ'.  அதைப்படித்தபோது கருணாகரத் தொண்டைமானின் வீரம் மட்டுமல்ல, அவன் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களும் என் சிந்தனையைத்  தூண்டின.  என்னதான் போரிட்டாலும் பாண்பாடு மிக்க தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தளபதி பயிர்களைக் கொளுத்துவதும், அழிவை எங்கும் விளைவிப்பதும் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப்பார்த்தேன். அதை முன்னிட்டுக் கலிங்கத்தின் வரலாற்றையும், வீர ராஜேந்திரன் காலத்தில் தமிழ்-கலிங்க எல்லை விவகாரங்களைப் பற்றியும் ஆராய்ந்தேன். பூசல் பலமாயிருந்தது.  அநீதிகளும் சில இழைக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது இழைத்தக் கொடுமைக்கு அவை ஏன் காரணமாயிருக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையையும் குலோத்துங்கன் ஸ்ரீவிஜயப் பயணத்தையும் இணைத்துப் பார்த்ததில் ' கடல் புறா" பிறந்தது. "கடல் புறா"வை 'கலிங்கத்துப் பரணி"யின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்.

 'கடல் புறா'வில் கற்பனையைப் பூர்ணமாக ஓட்டியிருக்கிறேன். சுவையான ஒரு கதையை வரலாற்றுக் குறிப்புகளுடன் நுழைத்துச் சலிப்பில்லாமல் மக்கள் படித்து மகிழச் செய்யப்பட்ட பெரு முயற்சியின் விளைவு 'கடல் புறா.' இதன் தரத்தை தமிழ் மக்களும் அரிஞர்களும் மதிப்பிடுவார்கள். ஆகையால் நான் மதிப்பிட முயலவில்லை. முயல்வதும் சரியாகாது.  சமைத்த பதார்த்தத்தின் பெருமையைச் சமைத்தவளே விவரிப்பது ரசமல்ல, பண்பாடுமல்ல.  

ஆனால் மதிப்பீடு செய்வது அத்தனை எளிதும் அல்ல. சிற்றறிவாளரும் பாரபட்சமுள்ளவர்களும் மதிப்பீட்டில் இறங்குவது எத்தனை அசம்பாவிதம் என்பதை சமீபத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில் கண்டேன்.  இலக்கிய மேதகளென்று சொல்லிக்கொள்ளும் சிலர், "சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் 'சரித்திரக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை" என் கிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவென்பதை சாதாரண மக்கல் கூடப் புரிந்து கொள்வார்கள். 'சரித்திரம்' என்பது ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்ல்லையென்பதும் ஆதியில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிய குறிப்புத் தொகுதிதான் என்பதையும் புரிந்துகொண்டால், 'சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் உடைகளைத் தவிர அதிக வித்தியாசம் எதுவுமில்லை'யென்பது தெரியவரும். அடிப்படை உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் ஆதிகால முதல் மனிதனுக்கு ஒரே விதமாகத்தனிருக்கின்றன. சரித்திரக் கதகளில் வீர, காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங்காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும்.  ஃப்ளுடார்க், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் காற்றில் பறந்து விடுவார்கள். இவர்களெல்லாம் போய் மீதி ஏதாவது நிற்கவெண்டுமென்றால், சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் ' இதுதான் இலக்கியம்" என்று எழுதுபவர்களே சொல்லிக் கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும். இந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று ஆண்டவனைப் பிரார்த்திப்போமா?  தேவையில்லை. சரக்கில்லாத நூல் மக்களிடம் செலாவணியாவதில்லை. தமிழ் மக்கள் உறுதியுள்ளவர்கள். தகுந்தது எது? தாகாதது எது என்பது அவர்களுக்குத் தெரியும்.

 'ஆகவே இலைக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது?' என்ற சர்ச்சை இப்போது தேவையில்லை. நூல்கள் பெருகட்டும்.  பிற்காலத்தில் எது இலக்கியம் என்பது தீர்மானிக்கப்படும்.  இப்பொழுது தேவைப்படுவது நூல்கள் பெருக துணை செய்யும் விமர்சனம். அப்படி விமர்சனம் செய்பவர்களும் தமிழ் நாட்டில் நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

ஆனால் நாம் ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுத வேண்டும்.  நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமல் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன்தான் நான் எழுதுகிறேன். 


இந்தக் கடல் புறா சம்பந்தமாக நான் படித்த வரலாற்று நூல்களின் பட்டியலைப் பின்னால் தந்திருக்கிறேன். அவற்றிலிருந்து நான் அறிந்த பல உண்மைகலை இந்த நவீனத்தைன் ஊடே செலுத்தியிருக்கிறேன். உதாரணமாக "கப்பல்களில் திசை காட்டும் கருவி நவீன காலத்தியது. வெள்ளையர் கண்டு பிடித்தது" என்று எண்ணுகிறோம்.  ஆனால் அதை சீனர் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பே அறிந்திருந்தார்களென்ற குறிப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல குறிப்புகள் இருக்கின்றன.

'யவனராணி முடிந்து எட்டு மாதங்கள் கழித்துதான் கடல் புறாவைக் குமுதத்தில் துவக்கினேன்.  அந்த எட்டு மாத ஆராய்ச்சியின் பலனைக் 'கடல்புறா"வில் பார்க்கலாம். தவிர நல்லதொரு கதையையும் பார்க்கக்கலாம்.  ''யவன ராணி''யைப் போல் ''கடல் புறா'' வும் மக்களிடம் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர் கதையாகப் பிரசுரித்த 'குமுதம்' ஆசிரியருக்கும் பிரசுரத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர்களிருவரும் எனது நண்பர்கள். அவர்களைப் பற்றி அதிகப்படி எழுதுவது முறையாகாது.  இருப்பினும் ஒன்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உன்ரும் தமிழகத்தில் நான் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் "குமுதம்" பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அண்ணாமலையும், அதன் பிரசுரகர்த்தர் திரு. பி.வி.பார்த்தசாரதியும் பல வகைகளிலும் எனக்களித்த ஆதரவுதான்.

'கடல் புறா'வுக்கு ஒரு முகவுரை தேவையென்று நினைத்ததும் என் நினைப்பில் வந்தவர் டாக்டர். என். சுப்பிரமணியம் எம். ஏ..பிஎச். ட். அவர்கள்தான். டார்க்டர் சுப்பிரமணியம் அவர்கள்வரலாற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தவர். சென்னைப்பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியர். முகவுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதும் ' பல்கலைக் கழக பேராசிரியர்கள்' வரலாற்று நூல்களுக்கு முகவுரை எழுதுவது விரும்பத்தக்கதல்லவென்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்' என்று கூறினார்.  'ஒரு துறையில் சரியாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் அதைப்பைபற்றி அபிப்பிராரயம் சொல்வதுதான் தவறு. விசயந் தெரிந்தவர்கள் எழுதுவதுதான் விரும்பத்தக்கது.  அப்பொழுதுதான் நல்ல இலக்கியம் வளரமுடியும்.  சென்னைப் பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியரான உங்களைப் போன்றவர்கள்தான் வரலாற்றுப் புதினங்களின் குணதோஷங்களைச் சரியானபடி எடுத்துச் சொல்லமுடியும்' என்றேன். பிறகுதான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் முகவுரை தர இசைந்தார்கள். அப்பெரியாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.  இதுவரை என் புத்தகங்களுக்கு நல்லறிஞர்களே முகவுரைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் இணையற்ற அரசியல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, பேராசிரியர் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே. வி. ரங்கஸ்வாமி ஐயங்கார், 'குமுதம்' ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இப்பொழுது பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியம் எம்.ஏ, பிஎச்.டி எழுதியிருக்கிறார். இவர் எழுதித் தந்திருப்பதி முகவிரை மட்டுமல்ல, வரலாற்றுப் புதினம் எழுது முறை பற்றுஇ விளக்கும் சிறந்த கட்டுரயுங்கூட என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

இம்முகவுரையை டாக்டர் சுப்பிரமணியம் எம்.ஏ, பிஎச்.டி, குறுகிய காலத்தில் எழுதிக் கொடுத்தார். 'கடல் புறா' வின் மூன்று பாகங்களையும் மிக விரைவில் படித்து எனக்குத் துரிதமாக முகவுரையும் எழுதி கொடுத்ததற்கு நான் மட்டுமல்ல 'வானதி'  உரிமையாளர் திரு. ஏ. திரு நாவுக்கரசும் கடமைப்பட்டவர். இந்த நாற்பது ரூபாய் ( இப்போது ரூபாய் 100 ) புத்தகத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆர்டர்களை நிறைவேற்ற சீக்கிரம் முகவுரை கிடைத்தது எத்தனை உதவி நான் சொல்லத் தேவையில்லை.

'கடல் புறா' கதையை மக்கள் 'குமுத'த்தில் படித்தாகிவிட்டது.  அவர்களை நான் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். எத்தனையோ செலவழிக்கும் நீங்கள் 'கடல் புறா' புத்தகத்தையும் வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள். அப்படிச் செய்வது எனக்கும் உதவி, பதிப்பாளருக்கும் உதவி. பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும் என்று கூறிக்கொண்டு உங்கள் ஆதரவு என்றும் இருக்கவேண்டும்றும் வேண்டிக்கொண்டு என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மக்கள்!



மின்னஞ்சல் நியூஸ்...

பசுமையான நிணைவுகள் 

'அந்தநாட்கள் மீண்டும் வந்திடாதோ
" OLD IS GOLD "

'அந்தநாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே
WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF


·         தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
·         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·         புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
·         சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
·         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
·         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·         உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·         எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர்அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
·         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
·         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

 உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம்அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·         எங்களிடம் செல்போன் டிவிடிப்ளை ஸ்டேஷன்எக்ஸ்பாக்ஸ்வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர்நெட்சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
·         வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·         உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
·         நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·         இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
·         இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

-  நன்றி : அருள், ஈப்போ