Wednesday, 22 May 2013

ராசிகளின் பலன்களும் அப்பாவி மக்களும்...

எனக்கு ஜாதகம், ஜோசியம், கிரக நிலைப் பலன்கள் போன்றவற்றில் அவ்வளவு நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

தொலைகாட்சியில் "இந்த நாள் உங்களுக்கு எப்படி?" என்றவாறு  ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான நன்மை தீமைகளை அலசுவதாக கூறிக்கொண்டு தினமும் ஒரே விசயத்தை திரும்பத்திரும்ப ஒப்புவிக்கும் ஜோதிட குறிப்புக்கள் எனக்கு அதிக வெறுப்பைத் தருவன வாகும்.

அதிலும் "உங்களுடன் இருக்கும் நண்பர்களால் உங்களுக்கு இன்று பாதிப்புகள் வரலாம்" என தினமும் இடம்பெருகின்றது. இது முறையில்லாத ஒழுக்கமில்லாத குறிப்பு.

உடன் இருக்கும் நண்பர்களினால் மட்டுமா பாதிப்பு?  உறவினர்களினாலும் உடன் பிறந்தோராலும் பாதிப்புகள் இல்லையா?  தினமும் நண்பர்களை பலிகடா ஆக்குவது சரியாகப் படவில்லை. அறிவுக்குப் பொதுந்துவதாகவும் இல்லை. பின்பு உண்மை நட்பின் மேல் எப்படி நம்பிக்கை வளரும்?
இதுபோன்ற தினப் பலன்களைக் கேட்போர் அனைவரும் அறிவாளிகள் அல்ல. அனுபவம் குறைந்த சிலர் இதைக் கேட்கும் போது, தங்களின் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்....இவற்றை நம்பி.

ஒரு உதாரணம் சொல்வேன். எனக்கு பழக்கமான குடும்பத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மறு நாள் மகனின் தந்தையார் நோயில் வீழ்ந்தார். மருத்துவரைப் பார்ப்பதை விடுத்து ஜோசியம் பார்பவரிடம் போயினர். புதிதாக வீட்டுக்கு வந்த ஒருவரால்தான் வீட்டுப் பெரியவர் நோயுற்றார் என அந்த ஆசாமி உளறி வைக்க, அதை நம்பிய அந்த அறிவுக் கொழுந்துகள், பாவம் அந்த அப்பாவி இளம் மனைவியை தனிமைப் படுத்தி சில நாட்களில் அவரின் தாய் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டனர்.

திகைத்துப்போய்,  நம்ப முடியாமல், ஆச்சரியத்தில் கண்கள் அகல விரித்தபடி அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்துக் கொண்டிருக்கத்தான்  முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

வாழ்க்கையின் முக்கியத்துவம் புரியாமல் என்னமோ ஏதோ என வாழ்பவர்கள் இவர்கள். திருமணம் எவ்வளவு முக்கியமான விசயம். அதில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் காதில் இருந்து மறைவதற்குள் இந்த மணப் பெண்ணை கேள்விக்குறியாக்கி விட்ட இவர்களை என்னவென்பது. விரும்பி நடந்ததா அல்லது திணிக்கப்பட்டதா..?  திருமணத்திற்கு முன்னால் யோசிக்கவேண்டிய பலவற்றை பலரும் திருமணம் முடிந்த பின்பே யோசிக்கிரார்கள்.

காலையில் தொலைகாட்சியில் ராசிபலனில் சொன்னதும், மாலையில் ஜோசியம் பார்க்கும் இடத்தில் சொன்னதும் ஒரே மாதிரியாக சரியாக உள்ளதாம்....வீட்டுக்கு வந்த புது உறவு சரியில்லை என்று. அடப் பாவிகளா.... திருமண ஜாதகம் பார்க்கும் போது இவை எல்லாம் மறைக்கப் பட்டு விட்டதா என்ன?
மிகச் சாதாரணமாக கையாள வேண்டிய ராசி பலன்கள் வாழ்வை சிதைக்கும் ஒன்றாக உருமாறி வருகின்றன.  அதை வழங்குவோர் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுமளவுக்கு, நடைமுறைக்கு ஏற்ற வகையில்  சொல்வதை விடுத்து மற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாவது போல் செய்வதை மாற்றிக் கொள்ளவேண்டும்.

உண்மையென எண்ணி கற்பனக் கதைகளையோ, நடைமுறைக்கு ஒவ்வாத தகவல்களையோ ராசி பலன் எனச் சொல்லும் போது பாதிப்புக்கு உள்ளாவோரையும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கல்வியறிவில் சம பலத்துடன் இல்லாதோர், காதில் விழும் அனைத்தையும் நம்புகின்றவர்களாகவே இருக்கினறனர் இன்னமும். 

ஜோதிடத்தில் நேர்மையானவர்கள் மிகவும் குறைவு. 'வாய்ப்பேச்சில் வீரர்கள்' என்பது இவர்களுக்கும் பொருந்தும். இல்லையேல் இவர்கள் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள்...? ஆயினும் ஒன்றைச் சொல்வேன். உங்கள் ராசி பலன் சொல்லும் திறன் அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிற்கு நீங்களும் ஒரு உபகாரணம் ஆகிறீர்கள். அதன் விகிதப்படி பாவமும் தண்டனையும் உங்களுக்கே...

 நடப்பவை நடந்தே தீரும்... அதை யாராலும் மாற்றிட முடியாது. உதிக்கும்போது விதிக்கப்பட்ட எதனில் இருந்தும் நாம் ஓடி ஒளிந்திட முடியாது. நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பது பலரும் உணரத்தொடங்கி விட்ட ஒரு கருத்து.

"இதைச் செய்திருந்தால் அதைத் தடுத்திருக்கலாம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கும் " என்று சொல்லப் படுகின்ற எதிலும் எனக்கு உடன்பாடில்லை. அவை நாம் நமக்கு ஆறுதலாக சொல்லிக்கொள்ளும் சில, அவ்வளவே.

ஒரு சிலர் பணம் பண்ணுவதற்காக நான் ஏமாறத் தயாராக இல்லை. அதற்காக என்னை யார் எப்படிச் சொன்னாலும் எனக்கு அதனைப் பற்றிய கவலையும் இல்லை.

பூ வாசத்திற்கும் குப்பைகளின் நெடிக்குமான வித்தியாசம் எனக்குத் தெரியும்.


 

Sunday, 19 May 2013

பணம் தேவையே, ஆனால்...

இளம் பிராயம் முதல் பணம் என்பது எனக்கு முக்கிய ஒன்றாகவே மற்றாவர்களைப் போல் எனக்கும் பட்டது. அதனை அடைய எல்லோரும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதனை பார்க்கும் போது பணத்தின் தேவை எவ்வளவு பெரியது என விளங்கத்தொடங்கியது.

எனது வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை உண்டு பண்ணிய பணம் என்னிடம் இல்லாது, என்னை வதைத்த காலமும், அனுபவமும் நிறையவே உண்டு. ஆனால் அதற்காக நான் என் கொள்கைகளையும் பிடிப்புகளையும் விட்டுக் கொடுத்ததில்லை.
குறுக்குவழிகளில் அதனை அடையும் குணம் எனக்கிருந்ததில்லை. அதுபோன்ற சிக்கலான சூழ் நிலைகளை சமாளிக்கும் வழிகள் எப்படியாவது ஒன்றிரண்டு எண்ணத்தில் உதித்து தேவைக்குத் தகுந்த பொருள் ஞாயமான வழிகளில் வந்தடைந்ததை இப்போதும் மன மகிழ்வுடனேயே எண்ணிப்பார்க்கிறேன்.

ஈய லம்பத்தில் வேலை செய்த போது பல்வேறு சந்தர்ப்பங்கள் கிட்டியபோதும்கூட, அதன் லாவகப் பிடியில், நேர்மைக்குப் புறம்பாக நான் செயல்பட்டதில்லை, .  உடன் வேலை பார்த்த பலரும் மூன்று நான்கு வீடுகளின் அதிபர்களாக வலம் வரும்போது, நான் பல காலம் வாடகை வீட்டில் இருந்ததும் எனக்கு தெரிந்திருந்ததுதான். ஆயினும் தகாத வழிகளில் வரும் பணத்தின் மேல் எப்போதுமே ஆசை வந்ததில்லை.

உறவினர்களிலும் நண்பர்களிலும் பலர் எப்படியும் வாழலாம் என பணத்தை அடைவதில் தீவிரம் காட்டுகின்றனர். மாட்டிக்கொண்டு அவமானமும் அடைகிறார்கள். அந்த  நேரத்தில் சுற்றி இருப்போர் அவர்களை எப்படி பார்ப்பார்கள், எவ்விதம் எண்ணுவார்கள் எனும் பயம் இல்லாமலே பலரும் தொடர்ந்து அடாத, தகாத வழிகளில் பணம் புறட்டுகிறார்கள். தங்கள் செயலால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நன்மதிப்பும் பாதிக்கப் படுவதை இவர்கள் அறியவில்லையோ...? இப்படி ஆணும் பெண்ணும் கேவல நிலைகளில் பணம் தேடுவதை பார்க்கையில் ஆச்சரியம் மேலிடுகிறது.

அரசாங்க பட்ஜெட்டில் எக்கொனொமிஸ்டுகள் போடும் கணக்கினைப்போல , சில நேரங்களில் அவர்களையும் மிஞ்சிய துள்ளியமான கணக்குகள் போட்டு குடும்பத்தை மேம்பாடடைந்த நிலைக்கு கொண்டுவந்த அனுபவமும், ஆனந்தமும் என் மனவிக்கும் எனக்கும் அதிகம் உண்டு.

குடும்பத்தில் எந்த முக்கிய செலவுகளையும் தள்ளிப் போட்டதில்லை...கடன் கேட்டதில்லை...பிறர் மெச்சும்படி வாழ நினைத்ததும் இல்லை.
போதும் என்ற மனமே சீரான எங்கள் வாழ்வின் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

நான் உங்கள் வீட்டு பிள்ளை ...


நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

காலம் தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயறம் போக்கும்
செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்

நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்ட்றல் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த செல்வம்
பேசும் மொழியே கோவில்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரம் ஆகும் கொள்கை

நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

Suba's birthday...





அமுதா இருவராக...