Friday, 12 August 2016

பழைய பாவங்கள், புதிய தண்டனைகள் 2 - பகுதி 1

கார் கிரீச்சிடும் ஓசை....

ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, "டமால்..."

ஒரு பிஎம்டபுள்யூ ரக கார் முன்னால் சென்று கொண்டிருந்த காரை இடித்திட, அதனை செலுத்திவந்த அமலா செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தாள்.

இடிபட்ட வாகனத்திலிருந்து ஒரு இளைஞன் கீழிறங்கினான். தனது காரின் பின்னால் வந்து பார்த்து விட்டு, இடித்தது யார் என உற்று நோக்கினான். கார் பலமாக கருப்பு நிற வர்ணத்தில் யாரும் உள்ளே பார்க்க இயலா வண்ணம் இருந்தது. சற்று அருகில் சென்று காரின் கதவைத் திறந்தான்.
அங்கே, அமலா ஓட்டுனர் இருக்கையில் இருப்பதை பார்த்து,
'என்னமா இப்படி செய்யுறீங்களே மா ' எனும் தோரணையில் தனது கைகளை அசைத்து தனது காரின் அடிபட்ட பாகத்தை காட்டினான்.

அவளும் தனது கார் இருக்கையிலிருந்து கீழிறங்கினாள்.
''சாரி, நான் இடிக்கனும்னு இடிக்கல, இடையிலே ஒரு மோட்டார் சைக்கிள்... அதை தவிர்க்கப்போய் உங்கள்  காரை இடிக்கவேண்டியதாகி விட்டது..."

அவனின் அடிபட்ட கார் பகுதியை கண்டாள். அதை விட தனது பிஎம்டபுள்யூ ரக கார் எப்படி என்பதிலும் கவனம் சென்றது. அதை அவனும் கவனித்தான்.

" இதற்கு இப்போ என்ன சொல்றீங்க?" என்றான் சற்று குரலை உயர்த்தி.

" அதற்குத்தான் சாரி சொல்லிட்டேனே..."

"சாரி சொல்லிவிட்டால், சரியாகிடுமா?"

" என் தவறு தான். காருக்கு நஷ்ட்ட ஈடாக எவ்வளவு எனச் சொன்னால், தந்துடுவேன்" என்றபடி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் கண்களில் அதிகாரம் தெரிந்தது. ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவள் இது போன்ற சாதாரண விபத்துக்கெல்லாம் அசைந்துவிடுவாளா என்ன.

"காருக்கு நஷ்ட்டயீடாக கொடுத்திடுவீங்க, விபத்தின் போது நேர்ந்த எனது மன அதிர்வுக்கும், மன உளைச்சலுக்கும் என்ன செய்யப் போறீங்க...?"
பணிந்து பேசுவதை விட்டு, 'உன் விலை என்ன சொல்..' என்பது போல அவள் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

" என்ன செய்யணும்...? உன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கணுமா?"
அவனின் முரட்டுத் தனமான குரலுக்கு ஈடாக அமலாவும் தன்னிலை மறந்து பதிலளித்துவிட்டாள்.

ஆனால் மறுகணமே சுதாரித்துக் கொண்டு  'சே, அதிகம் பேசிவிட்டோமோ' என மனதில் பட்டது.

"ஆமாம்.... கட்டிப் பிடிச்சி ஒரு முத்தம் கொடு, விட்டுடுறேன்..." என்றான் அவன்.

தன் வார்த்தையை அவன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்ந்து அவள் சற்று தடுமாறிப் போனாள். அதை தடுத்து நிறுத்த, கடுகடுப்பான அதே நிலையில்,
"டேய், உனக்கு என்னை யாருன்னு தெரியாது.... வேண்டாம், விட்டுடு, உனக்கு எவ்வளவு வேண்டுமோ சொல், தந்துடுறேன்...." என்றாள்.

இதற்கிடையே கூட்டம் கூடிவிட, இவர்களின் வாய்ச்சண்டையில் புன்னகை முகங்களாக தெரிந்தனர் அருகில் இருந்தோர்.

இது சரிப்பட்டு வராது. உடனடியாக இந்தப் பிரச்சினையை தீர்த்தாக வேண்டும், என சிந்தித்த படி  தனது விவேக கைபேசியில்  தனது மேனேஜரை தொடர்பு கொண்டாள். அவனின் கார் எண்ணைச் சொல்லி, "எவ்வளவு ஆகும்னு உடனே சொல்லுங்க" என உத்தரவிட்டாள்.

சில வினாடிகள் நகர்ந்தன....

கைபேசி ஒலிக்க, மறு முனையில் அவளின் மேனேஜர் ஏதோ பேசிக்கொண்டிருப்பது அவனுக்கும் லேசாக கேட்டது.

அவனிடம் திரும்பி,
" இங்க பார், இரண்டாயிரம் ரிங்கிட் தரேன். வாங்கிட்டு போ...."  என்றாள்.

" அதுதான் சொன்னேனே, காருக்கு நஷ்டயீடு கிடைச்சிடும்.... என்னுடை மன உளைச்சலுக்கு என்ன தீர்வு? கட்டிப் பிடிக்கிறியா, முத்தம் தரியா? " என்று மீண்டும் அவளை வம்புக்கிழுத்தான்.

" நீ அனாவசியாமா பேசுறே. போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணுவேன். ஜாக்கிரதை..."

"அட பாருடா... ''இவள் வந்து இடிப்பாளாம், போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணுவாளாம், நாம வேடிக்கைபார்த்தபடி கைகட்டி நிற்கணுமாம்....'' என்றவாறு அலட்சியமாய்ச் சிரித்தான்.

அவனின் காமிடி பேச்சைக் கேட்டு  சுற்றி இருந்தோர் கேலியாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாள். 'இவனிடமிருந்து எப்படி உடனே தன்னை விடுவித்துக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல்வது' என அதிவேகத்தில் மனதில் ஓடியது.
"சரி இப்ப உனக்கு என்னதான் வேணும்...?"

இந்தச் சின்ன சின்ன விசயங்களுக்காக நேரத்தைக் கடத்திக்கொண்டு நடுத் தெருவில் முன் பின் தெரியாவனுடன் வாதிட தயாராயில்லை அவள்.

" இரண்டு விசயங்கள்..... ஒன்று, அடிபட்ட காரை நீயே உன் பொறுப்பில்  ஏதாவதொரு பட்டறைக்கு அனுப்பி வைத்து, அந்த பழுதுகள் முடிவடையும் வரை உடன் இருக்கணும். இரண்டு, உன் வாயிலிருந்து வந்தது போலவே, என்னைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தரணும். அவ்வளவுதான், நாம சமாதானமா போயிடலாம்...."

அவளுக்கு ஜிவ்வென்று கண்கள் கோபத்தில் சிவந்தன....
மீண்டும் கைபேசியை எடுத்தாள்.... அவனுக்கு நேர் எதிர்பக்கம் திரும்பியபடி,
" மொத்த விலை எவ்வளோ சொன்னீங்க, சரி .. நான் செக் கொடுத்துடுறேன், நீங்க வந்து பார்த்துக்குங்க இதை " என தனது மேனேஜருக்கு  உத்தரவிட்டாள்.

' இங்க பாரு, உனக்கு ஐந்தாயிரம் வெள்ளி தரேன், வாங்கிட்டு போய் பழுது பார்த்துக்க"

" உன் பணம் எனக்கெதுக்கு. உன் தவற்றினால்  அடித்து நொறுக்கிய காரை நீயே சரி செய்து கொடுத்திடு.... அதுவரை நீ இங்குதான் இருக்கணும்...."

"டேய் என்ன புதுசா பேசுற, வேறு  எங்கும் இதுபோல விபத்துக்கள் நடக்காதது மாதிரி. அங்கெல்லாம் உன்னை மாதிரியா திமிரா பேசினாங்க?"

" யாருக்கு திமிர், உனக்கா எனக்கா?" அவனுக்கும்  கோபம் வந்தது.

" கடைசியா கேட்குறேன், உனக்கு என்னதான் வேணும்...?"

சுற்றி நின்றவர்களில் ஒருவன்,
"இங்க பாருங்க மேடம். ரிப்பேர் சுமார் இரண்டாயிரம் வரும். நீங்க சொன்னது போல ஐந்தாயிரமா அவருக்கு கொடுத்திடுங்க... நீங்க சும்மா பேசிக்கொண்டே இருந்தா காரியம் ஆகாது" என்று அழைக்காத நடுவரானார்.

அவள் உடனடியாக அவனுக்கு பணத்தை கொடுத்து பிரச்சினையில் இருந்து விடுவித்துக் கொள்ள எண்ணினாள். காருக்குச் சென்று தனது செக் புத்தகத்தில் 'ஐந்தாயிரம்' என தயார் செய்து, அவனுக்கு கொடுத்திட அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, தனது காரில் ஏறி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

" ஏய் மிஸ்டர். இந்தா செக்...." என அவனை நோக்கி வேகமாக நடந்து வருவதற்குள், அவன் அங்கிருந்து சென்று கண்ணில் இருந்து மறைந்தான்....

'யார் இவன். அதிக பணம் கொடுத்தாலும்  வேண்டாம் என்று போய்விட்டானே....' அதிகாரத் தோரணையில் அவனுடன் பேசி இருந்தாலும், அவனின் ஒரு சில வார்த்தைகளில் தான் சினத்தில் சிக்குண்டதை எண்ணிப் பார்த்தாள். மற்றவர்களின் பார்வையில் தன்னை அவன் கேலிப் பொருளாக்கி நகர்ந்துவிட்டான் என்பது மட்டும் அவளின் அடி மனதில் பதியத் தொடங்கியது.

ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்து காரை செலுத்தி,  தனது நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு  அவளின் வருகைக்காக மேனேஜர் காத்திருந்தார்.
" மேடம் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?" என அக்கறையுடன் விசாரித்தார்.

அமலாவின் தந்தை காலத்தில் இருந்து அவர்களின் நிறுவனத்தில் மேலாளராக புரிந்து வந்தவர். தனது தந்தையின் மறைவுக்குப் பின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அமலா, இந்தப் பெரியவரையே தனது மேனேஜராகவும் தொடரச் சொல்லிவிட்டாள்.

" இல்ல ... எனக்கு ஒண்ணுமில்ல.... என் அறைக்கு வாங்க..."
என்றபடி அவருக்கு முன்னால் நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.

" என்ன நடந்தது மேடம். ஏன் ஒரு சின்ன விபத்துக்கு இப்படி விசனப் படுறீங்க? அவன் ஏதும் முரட்டுத் தனமா நடந்து கொண்டானா....? நான் என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு தட்டு தட்டச் சொல்லவா?" என்றார் பெரியவர்.

" வேண்டாம்..வேண்டாம்... அப்படி ஒன்னும் நடக்கல"

"பிறகு என்னதான் நடந்தது...."

" ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே போனது. அதை தவிர்க்க நினைத்து வேறு பக்கம் ஸ்டியரிங்கை வளைத்தேன். எதிர்பாரா விதமாக முன்னால் சென்ற அவன் காரை மோதிவிட்டேன்.... என் தவறுதான். ஆனா அவன் ரொம்பவே பேசிவிட்டான்...." என்றாள் மீண்டுமொரு முறை நடந்ததை  நினைவுபடுத்திபடி....

" அப்படி என்ன பேசிவிட்டான், உங்களுக்கு கோபம் வரும்படி...?" என  பெரியவர் கேட்க,  சுய உணர்வுக்கு வந்தாள், அமலா....

உம்.. இவரிடம் எப்படிச் சொல்வது, அவன் கட்டிப்பிடித்து முத்தம் ஒன்றைக் கேட்டான் என்று....

" அது பரவாயில்ல. விடுங்க.... ஆனா, அவன் எந்த போலிஸ் நிலையத்திலாவது ரிப்போர்ட் செய்த்திருக்கானான்னு மட்டும் பார்த்துக்குங்க....  அடுத்த  24 மணி நேரம் நாமும் கவனமா இருக்கணும்."

சரியென தலையாட்டிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

அவளும் அன்றைய வேலைகளில் மூழ்கத் தொடங்கினாள்.

வேலைகள் நகர்ந்தனவே தவிர, மனம் மீண்டும் அவனை சுற்றியே வலம் வந்தது. அதிக விலையில் காரின் உபரி பாகங்கள் விற்கப் படும் இக்காலத்தில், அவன் தான் கொடுக்க வந்த பணத்தை வாங்க மறுத்து அங்கிருந்து அகன்று விட்டது அமலாவை என்னவோ செய்தது.

அவன் ஒரு நடுத்தர வர்கத்து இளைஞனாகவே அவளுக்கு பட்டது. தூக்கலான தொனியில் தான் பேசியது அவனுக்கு எரிச்சலைத் தந்திருக்குமோ..... அல்லது போலிஸ் என நான் மிரட்டியதும் பயந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டானா? முகத்தையும் உருவத்தையும் பார்த்தால், அவன் கெட்டவனாக கற்பனை பண்ணிட முடியவில்லையே.

விபத்துக்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தா தீர்த்துக் கொள்கிறார்கள்.... இவன் மட்டும் ஏன் அப்படி சிந்திக்க வேண்டும்....?
இல்லை.... அது அவனாக உதிர்த்த சொல் அல்ல.... அவசரத்தில் நான் உளறியதை அவன் கையிலெடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்.....
பெயரையும் வசிக்கும் இடத்தையும் கேட்டிருக்கலாம். ஹூஹும் ... நமக்கெதற்கு அவன் பெயரும், வசிக்கும் இடமும்...??? மனது என்னென்னவோ சிந்திக்க, அவனின் குறு குறு பார்வையோடு, அந்த புன்னகையும் சேர்ந்து அவனை அழகாகவே காட்டியது.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு நினைவலைகளில் இருந்து திரும்பியவள்,
"யெஸ் , கம் இன்..." என்றாள்.

தனது நிறுவன பரிசோதனைக்கு   வந்திருந்த அரசாங்க அதிகாரிகளுடன் பேசி பணியில் கவனம் திரும்பிட மணி மதியம் இரண்டாகியது.

தனது மேனேஜரிடம் வந்திருப்போரை அருகில் இருக்கும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று  மதிய உணவு வாங்கித் தந்துவிடும் படி கேட்டுக் கொண்டாள்.
" நீங்களும் வாங்களேன், மேடம்...." பெரியவர் அவளையும் அழைத்தார்.

" இல்லை நீங்க போயிட்டு வாங்க ..." என மறுத்து விட்டாள் அமலா.
தான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டியை கொறித்துக் கொண்டே, பார்வை ஏதோ ஓரிடத்தில் பதிந்திட மீண்டும் கற்பனை உலகில் மிதக்கலானாள்.

'அவனிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கிறதோ இல்லையோ... தான் ஒரு பணக்காரி எனும் தோற்றத்தை அவன் மதித்தது போல் இல்லையே. கார், உடை, பேசும் தோரணையில் என்னைப் பார்த்தபின்னுமா எனக்கு மரியாதை தர அவனுக்குத் தோன்றவில்லை....? எங்கே வேலை செய்கிறான். என்ன வேலை செய்கிறான்.... ' சிந்தனைகள் வட்டவட்டமாய் தலைக்கு மேல் அசையத் தொடங்கிவிட்டன...

'சே, அவனை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தி இருக்கலாம்.... அவனுடன் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாம். அவன் கார் பழுதுகளை  நாமே செய்து தர ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்.'

ஆனாலும் அமலாவிற்கு ஆச்சரியமாகவே இருந்தது. வேறு யாரையும் இப்படி, இந்த அளவில் தான்  நினைத்துப் பார்த்ததில்லை என்பதே சற்று வித்தியாசமாகப் பட்டது.

மீண்டும் பணிகளில் தொடர்ந்திட எண்ணினாள். முடியவில்லை.

மதிய உணவுக்குப் போய் வந்தததும் மேனேஜரை அழைத்தாள்.
"அங்கிள், கொஞ்சம் என் ரூமுக்கு வரிங்களா...?"

பெரியவருக்கு ஆச்சரியம் மேலெழுந்தது.  தன்னை 'அங்கிள்' என அழைக்கிறாளே? அலுவலக நேரத்தில் 'மேனேஜர்' என்று தானே அழைப்பாள், வழக்கமாக... இன்று என்ன நடந்தது.... '

தாய் தந்தை இறந்ததும், அமலாவிற்கும், அவள் அண்ணனுக்கும் பெரியவர்தான் எல்லாம். இவர்களிருவரையும் வளர்த்து ஆளாகியதும் இவர்தான். ஆனால், வேலை நேரத்தில் பாசத்துக்கு இடமில்லை என்று கண்டிப்புடன் நடந்துகொள்வார். அதன் படியே அலுவலக நேரத்தில் மேனேஜராகவும், மற்ற நேரங்களில் அங்கிளாகவும் அழைக்கச் செய்துகொண்ட ஏற்பாடு. இப்போது தன்னை அங்கிள் என அழைத்திருக்கிறாளே.... உம், என்னவாக இருக்கும்????

'' மேடம் வரச்சொன்னீங்களா....?"
எனக் கேட்டபடியே அறையின் உள்ளே பிரவேசித்தார் மேனேஜர்.

" நான் இப்போ என்னோட மேனேஜரை வரச் சொல்லல, என்னோட அங்கிளைத்தான் வரச் சொன்னேன்".

புன்னகைத்தார் பெரியவர்....
" சரிமா ., இப்ப என்ன நடந்தது, ஏன் இப்படி டல்லா இருக்க?"

" அங்கிள், நீங்க எனக்கொரு உதவி செய்யணும்."

"சொல்லுமா.... இதை கேட்கணுமா ....?"

"இன்றைக்கு காலையில நான் ஒருத்தனை காரில் மோதிட்டேன் இல்ல, அவனுடைய பெயரும், முகவரியும் வேணும்...."

" அது ஏன் உனக்கு. அது ஒரு சாதாரண விபத்து. அதை அப்படியே விட்டுடுடனும்...." பெரியவரிடமிருந்து அறிவுரையாக வந்தது.

" இல்ல அங்கிள், அவன் காருக்கு சேதம் அதிகமாத்தான் இருக்கும். நீங்க சொன்னது போல பணம் கொடுக்க நினைத்தேன். ஆனா, அவன் என் பணத்துக்கு காத்திருக்கல. அங்கிருந்து போயிட்டான்.  எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து வந்து சொல்லுங்க. அவனுக்கு சேரவேண்டியதை கொடுத்திடுறேன்....."

" அதுக்கு ஏனம்மா நீ போகனும், நானே பார்த்து செட்டில் பண்ணிடுறேன்."

" இல்லை அங்கிள். நீங்க அவனைப் பற்றிய தகவல் மட்டும் கொடுங்க, நான் பார்த்துக்கிறேன்."

அமலா, பெரியவரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள். கொஞ்சம் கூச்சப் படுவது போல   பெரியவருக்கும் தெரிந்தது.

29 வயதில் இவள் நெளிகிறாளே.... ???? சில விசயங்களை தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்கமுடிவதில்லை. இதற்கெல்லாம் தாய் தான் சரியானவர். ஆனால், இவளுக்கு இப்போது இரண்டும் நான் தானே. எப்படி கேட்பது ...? என மனதில் தோன்ற,
" ஏனம்மா அமலா, அவனைப் பற்றிய பிரச்சினையை நீயே தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கா, நான் தெரிஞ்சிக்கலாமா? " என்றார்.

"அப்படி எதுவும் இல்லை அங்கிள். கேட்டதை மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்திடுங்க. போதும், ப்ளீஸ்..." என்று பெரியவரை பார்த்தாள்.

“உம்,  சரியென” சொல்லி தலையாட்டி விட்டு அறையில் இருந்து வெளியேறினார் பெரியவர். அவருக்கு தான் வளர்த்து ஆளாக்கிய செல்லப் பெண் எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளக் கூடாதே எனும் பயம் மட்டும் இருந்தது.

அடுத்த வாரம் தொடரும்.


Wednesday, 10 August 2016

புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் திராட்சை விதைகள்...

திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய்க் கிருமிகளை விரட்டி நோயைக் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல்  சிறப்பு.
கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது.

ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவது புற்றுநோயால் பதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் , திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோயைக் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.

இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி உள்ளிட்ட முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய்க் கிருமிகள் மட்டுமின்றி ஆரோக்கியமான செல்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை வேகமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது என்று ராஜேஷ் கூறியுள்ளார்.

Thursday, 14 July 2016

படித்ததில் பிடித்தது - புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா!




மாநகரத்தில் ஓர் இயற்கைப் பொக்கிஷம்:புக்கிட் நானாஸ் இயற்கைப்  பூங்கா!


நோன்பு பெருநாளுக்கு நீண்ட விடுமுறையாக சொந்த ஊர்களுக்குச் சென்று,  சாலை நெரிசலில் சிக்கி ஒருவழியாக தலைநகர் வந்து சேர்ந்தவர்கள்  நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்கு  நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்பது நிச்சயம்.  
அப்படியிருக்க, இந்த வார இறுதியை எங்கு கழிக்கலாம் என யோசிப்பவர்கள், குறிப்பாக  இயற்கை விரும்பிகள்  புக்கிட்  நனாஸ்  பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்காவிற்குப்   போய் வரலாம்.  
ஆங்காங்கு வானுயர கட்டிடங்கள் நிறைந்துள்ள கோலாலம்பூர் மாநகரத்தில் பசுமை ததும்பும்  ஓர் இடமாகத் திகழ்கிறது இந்த புக்கிட் நானாஸ் இயற்கை பூங்கா. ஒரு காலத்தில் புக்கிட் வெல்ட் என்றழைக்கப்பட்ட இப்பகுதி, தீபகற்ப மலேசியாவிலேயே மிகவும் பழமையான  பாதுகாக்கப்பட்ட  காட்டுவளங்களுடன் கூடிய இயற்கைப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை பொக்கிஷம் என்பதால் இப்பகுதி "Green Lung" என வர்ணிக்கப்படுகிறது. இயற்கைப் பூங்காவாகவும், காடு மற்றும் இயற்கை வளம் பற்றிய கல்வி மற்றும் ஆய்வுக்கான தளமாகவும் இந்த புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட புக்கிட் நானாஸ் இயற்கைப் பூங்கா திகழ்கிறது. 
இங்கு என்ன இருக்கிறது?
இங்கு வருகைப் புரிபவர்கள்  பசுமையான இயற்கை வளங்களையும், பலதரப்பட்ட  செடிகள்,பூக்கள் மற்றும் காட்டு வளங்களையும்,  விதவிதமான பல வண்ணங்களாலான பறவைகளையும், பார்த்து மகிழலாம்.
 தினம் கேட்கும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிப்படும்  இரைச்சல்களிலிருந்து வெளியாகி, இயற்கையின் அமைதியையும், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசையையும் கேட்கும் வாய்ப்பு கிட்டும். 


இது தவிர சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா,  ஓய்வெடுக்கும் வகையிலான கொட்டகைகள், நாற்காலிகள், கூடாரம் அமைப்பதற்கான வசதிகள், மெது ஓட்டத்திற்கான தடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த பாதுகாக்கப்பட்ட காடு குறித்த விபரங்களைப் பெறுவதற்கான தகவல் அறையும் இங்கு உள்ளது. 
வருகையாளர்களுக்கான நேரம்:
பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தில் 7 நாட்களும் புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்கா காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
நுழைவு இலவசம் என்பதால், வார இறுதியை உற்சாகமாகக் கழிக்க விரும்புபவர்கள், புக்கிட் நானாஸ் இயற்கை பூங்காவில் இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்து வரலாம். 

எங்கு இருக்கிறது?
முகவரி:
Hutan Simpan Buk​it Nanas​ 
Lot 240, Bukit Nanas, Jalan Raja Chulan,
50250 Kuala Lumpur.
Tel: 03-20706342
- நன்றி : வணக்கம் மலேசியா 

Tuesday, 17 May 2016

'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

படித்ததில் பிடித்தது...

மூடப்பட்டது திரையரங்கம் !!!

ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது. 

1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்தப் புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது. 

நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.  

1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில்,  தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.
பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார்.  அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில்,  சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தைக் காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது. 

தியேட்டரின் முழுநிர்வாகத்தையும்,  சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என  பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான்,  தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.  

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலகப் போட்டியைத் தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும்  நிறைவேறவில்லை என்பது வேறு கதை. 
2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. 

சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.
சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது,  சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது. 

அதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி,  தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய்,  இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள். 

இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.
 அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட்,  சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.

இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம்  கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமாக நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்'  என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம்  கவலையுடன் பேசினர்.
இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.  

இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர்,  சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.
தியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

Tuesday, 26 April 2016

இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!

படித்ததில் பிடித்தது....

சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 27 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. 
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார். இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.
முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். 
ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது. அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது. 
இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது. 
1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது.
ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும். 
1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது.
பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.
இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 
ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர். இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது. 
இன்று இணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்.
( செந்தில்வயல்.காம்)


Friday, 19 February 2016

எம்ஜிஆர் 100 | 2

படித்ததில் பிடித்தது...

எம்.ஜி.ஆரின் அக்கறை

------------------------------------------------------


M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.

படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

-தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage

எம்ஜிஆர் 100 | 1

படித்ததில் பிடித்தது...

அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

--------------------------------------------



M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!

தொடரும்..

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage