Friday, 20 December 2013

ஆன்மீக அறிவை ஊட்டுபவர்கள் குருக்கள்...


எங்கும் எதிலும் சந்தேகங்கள் எழலாம். ஆனால், சமய போதனைகளிலுமா சந்தேகம்...? ம்ம் ஒருவேளை, சமயத்தில்தான் அதிக சந்தேகங்களோ?

அப்படி எழும் அந்த சமயக் கேள்விகளுக்கு விளக்கங்கள் தருபவர்களே 'குருக்கள் அல்லது குருமார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

ஐயமற அறிவு புகட்டும் அவர்களுக்கு பெற்ற தாய் தந்தையைப் போன்றதொரு உயர்ந்த இடம் நம் இந்து மதத்தில் உண்டு. அஞ்ஞான, விஞ்ஞான சந்தேகங்களைப் போக்கி நமக்கு மெய்ஞானத்தை ஊட்டுபவர்களாக குருவிற்கு உன்னதமான ஓரிடம் தந்திருக்கிறோம்..

ஆனால், அது 'குரு' அளவு மட்டுமே அந்த உயர்ந்த இடம், அதற்கு மேலில்லை. அவர்களை இறைவனாக பார்ப்பது தவறு. இறைவன் மட்டுமே இறைவனாக முடியும். மனிதர்கள் அல்ல. அப்படி இருக்க, செய்வதென்னவென்றறியாது சிறு பிள்ளைத்தனமாக குருக்களை தெய்வமெனக்கொள்வது ஆன்மீகத்துக்கு   நம் அறியாமையினால்  செய்யும் பாவம்.

Wednesday, 18 December 2013

கவனம் : பழைய பாடல்கள்...

பழைய பாடல்களில்  இறவா இசையாக பல இருக்கின்றன. அவற்றுள் தற்போது என் மனதில் ரீங்காரமிடும் தேன் துளிகள் இவை:
வெறும் வார்த்தைகளாக இல்லாமல், களிப்பூட்ட,  இலக்கிய மணத்துடன்  இன்பத் தமிழில் வந்த பாடல்கள்....

அன்பே வா
அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
அன்பே வா...

தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மயக்கும் மாலைப்பொழுதே நீ போ!போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா!வா!
இன்னலைத் தீர்க்கவா!( மயக்கும்மாலை)
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே (பன்னீர்)
(மயக்கும் மாலை)

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல்
கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க

தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும் ( மலரென்ற)
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும் ( மலரென்ற)

பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா

ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மைய்யா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
(ஐயா)
ஐயா சாமி ஓ ஐயா சாமி

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே...
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்

தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வாழ்வில் பலமுறை சாகிறோம் நாம்...


12 ஆண்டுகளுக்கொருமுறை நமது உடலில் உள்ள செல்கள் இறக்கின்றன. மீண்டும் புதுப் புது செல்கள் தோன்றுகின்றன. அதனால் தான் நாம் அன்றைய பழைய படங்களில் இருந்ததைப் போல இன்று இருப்பதில்லை. நாம் நம் வாழ்வில் பலமுறைச் சாகிறோம் என்று இதனையே குறிப்பிடுவார்கள். வாழ்க்கை இப்படி இருக்க இறப்புக்கு ஏன் மனிதன் பயப்படுகிறான்....?

- "மஹாபாரதம் 20 மணி நேர தொடர் பேருரையில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்.

Tuesday, 17 December 2013

SDB & PALM GARDEN days....

 A year before the closing of Selangor Dredging Berhad.... in 1991
( At the centre with a handbag and a diary is our Dredgemaster Mr Cheok Yaw Seong )

This was in 1994 at the Maintenance Department's family day function in PALM GARDEN GOLF CLUB

Tuesday, 10 December 2013

படித்ததில் பிடித்தது...பகுத்தறிவுள்ள இந்துமதம்

காலப்போக்கில் பல தரமான புத்தகங்களை நாம் மறந்துவிடுகிறோம். பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றுள் ஒன்று, பதிப்பாளர், புத்தக ஆசிரியர் போன்றோர் அந்தந்த புத்தகங்களினால் பெற்ற இலாபம் போதும், இனி எதற்கு மறுபதிவு என எண்ணியிருக்கக்  கூடும். ஆயினும் மனிதர்களுக்கு நன்மை
தரக்கூடிய அரிய விசயங்களை கொண்டிருக்கும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப பதிவிடப்பட்டு, விளம்பரப் படுத்தப் பட்டு  மக்களைச் சென்றடையச் செய்வதில் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு முனைப்பு எப்போதும்  இருக்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில், பல வருடங்களுக்கு முன் அச்சிடப்பட்டு வெளிவந்த "பகுத்தறிவுள்ள இந்துமதம்" எனும் புத்தகம் அன்மையில் நான் படித்தவற்றுள் என்னைக் கவர்ந்த ஒன்றாகும்.

"வியப்புக்குரிய விஞ்ஞான விசயங்கள்" என அட்டையிலேயே அதன் உள்ளடக்கத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

நான் ரசித்த அந்த புத்தகத்தில் இருந்து முதல் அத்தியாயத்தை அப்படியே இங்கே உங்களின் ரசனைக்குத் தருகிறேன். நீங்களே படித்து முடித்து அதன் தரத்தை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இன்னும் பல பிரதிகள் வாங்கி அதனை மற்றவருக்கும் பகிர்ந்து நம் மதத்தின் உண்மைகளை விளக்க உங்களால் ஆனதைச் செய்யுங்கள். பழையது தொடரும் போதுதான் இளையோர் அதைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இனி புத்தகத்தின் முதல் அத்தியாயம்...

சிவன் சக்தி பற்றி சிந்தியுங்கள்!

இயற்கையின் வடிவாய் இன்ன இடமென்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதே பிரம்மம்.

அணுவிலும் பிரம்மம் உண்டு.
மனிதனிலும் பிரம்மம் உண்டு.
அண்ட பிரம்மாண்டங்களிலும் அந்த பிரம்மம் உண்டு.

உள்ளார்ந்த அதன் சக்தி வடிவம் அனைத்துப் பொருள்களிலும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கி வருகிறது.

நாம் மண் என்றும் கல் என்றும் மரம் என்றும் நினைக்கும் ஜடப்பொருள்களின்
நுண்ணிய அணுத்துகள்களுக்குள்ளேயும் உயிரியக்கம் நடந்து வருகிறது.

அந்த அணுக்களின் உயிரியக்கமே அண்டம் வரை  வியாபித்திருக்கிறது.

ஊசிமுனையிலும் பல்லாயிரம் மடங்கு சிறியதான ஒவ்வோர் அணுவிலும், நேர் மின்னாற்றலும் எதிர் மின்னாற்றலும் கொண்ட இரு சக்திகளின் சுழற்சி ஓயாமல் நிகழ்ந்து வருகிறது என்பது இயற்கையின் தத்துவம்.

விஞ்ஞானம் சொல்கிறது அவை 'புரோட்டான் - எலக்ட்ரான்" என்று.
அதற்கு இந்துமதம் சொல்லியது: அவையே " சிவம் - சக்தி" என்று.


அணுவின் இயக்கத்திற்கு ஆதாரமான இந்த சிவமும் சக்தியுமே, அனைத்துலகிலும் அண்ட பேரண்டங்களிலும் உயிரியக்கம் தருகின்றன.

அணுவில் சுழலும் புரோட்டானும் - எலக்ட்ரானுமே சிவமும் சக்தியும் என்றால்,
-  கருவுக்குக் காரணமாகும் விந்தணுவும் - சினை முட்டையுமே சிவமும் சக்தியும்.
-  நுண்ணுயிர்க்குத் தேவையான வெப்பமும் - ஈரமுமே சிவமும் சக்தியும்.
- மூச்சுக்குள் நிலவும் வலக்கலையும் - இடக்கலையுமே சிவமும் சக்தியும்.
-  உடலுக்கு உரமூட்டும் பகலும் - இரவுமே சிவமும் சக்தியும்,
-  உயிர்களுக்கு வாழ்வளிக்கும் வெய்யிலும் - மழையுமே சிவமும் சக்தியும்,
-  அணுவில் தொடங்கி அண்டம் வரை ஒரே பௌதிக விதியே அடங்கியிருக்கிறது.

பாஸிட்டிவ்வும் நெகட்டிவ்வும் சேர்ந்தால்தான் மின்சாரத்துக்கு சக்தி வரும். ஒன்றுக்கொன்று நேர்மாறான சிவ சக்திகளின் இணைப்பே உயிரியக்கத்தின் தத்துவம்.

இந்த மகத்தான ரகசியத்தைப் புரிந்து கொண்டுதான் இந்து மதத்தினர் சிவத்தையும் சக்தியையும் தெய்வங்களாக உருவகித்து வழிபட்டனர்.

அணுக் கூறுகளாய் அவற்றின் சக்திமயமாய் எங்கும் நிரம்பின பிரம்மத்தையே ஆண்டவன் என்கிறது இந்து மதம்.

அதைக் ஆண்டவன் என்று வணங்கினாலும் சரி, தொழுதாலும் சரி, இயற்கை என்று மட்டுமே ஏற்றுக்கொண்டாலும் சரி, யாவும் குறிக்கும் அந்த பரம்பொருள் ஒன்றே.

அதை நினைக்கும் மனதிற்கு நிம்மதி உண்டு. நம்பும் இதயத்திற்கு நன்மை உண்டு,அழைக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டு.

கல்லை வணங்கினாலும் அது கடவுளே.
புல்லை போற்றினாலும் அது புனித தெய்வமே.
கல்லையும் மண்ணையும் காலில் இடறுகிற மனிதனுக்கு, அவற்றிலுள்ள கடவுள் தன்மை புரியும்.

முட்டாள் யோசனை கேட்பது புத்திசாலியிடமே.
நோஞ்சான் துணைக்கு அழைப்பது பலசாலியையே.
நோயாளி சிகிச்சைக்குப் போவது மருத்துவரிடமே.
நம்மைவிட மேலானவற்றில்தான் நமக்கு நம்பிக்கை பிறக்கும்.

பாறை வடிவங்கங்களாக இருந்த கற்கள், பரமனின் உருவம்  பெறும்போதுதான் பக்திக்குக் காரணமாகின்றன.

தெய்வத் திருவுருவங்களின் தோற்றுவாய் இதுவே.
ஒன்றில்  மனத்தை நிறுத்தவே இந்த உருவங்கள்.
சூன்யத்திலும் மனத்தை நிறுத்த ஞானிகளால் முடியும்.
பார்க்கும் பொருளில் பரவசப்படவே பாமரனால் முடியும்.
பலவிதமான விக்கிரகங்களும் படைக்கப்பட்டதான்  காரணம் இதுதான்.

ஆனால் ஒவ்வொரு விக்கிரகமும் உன்னதமான அர்த்தங்களின் அடக்கம், தெய்வீக ரகசியங்களின் தேக்கம்.

பரவிக் கிடக்கும் சூரிய ஒளி பூதக் கண்ணாடியின் வழியாய் குவியும் போது பற்றி எரிகிறது.

பசுவின் உடலெங்கும் பாய்கிற ரத்தம் அதன் மடியில்தானே பாலாகச் சொரிகிறது?

எங்கும்  நிறைந்த இறையருள் நம்பிக்கை நினைவால் ஒன்றாகக் குவிகிற இடமே விக்கிரகங்கள்.

அர்த்தம் இல்லாத எதையும் இந்துக்கள் அனுஸ்டானத்திற்கு ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்து மதத்தினரின் பக்தி மார்க்கமும் இணையற்ற பகுத்தறிவின் விளைவே.

பரம் பொருள் ஒன்றே என்பது அவர்களுக்குக் தெரியும். அதன் பல்வேறு தாத்பரியங்களைத்தான் பலவிதமான தெய்வங்களாக உருவகித்து,  அவரவர்கள் மனப் பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வணங்குகிறார்கள்.

இதய சுத்தியோடு வணங்கினால், எந்த உருவை வழிபடுகிறோமோ அந்த உருவிலேயே ஆண்டவனின் அருள் சித்திக்கும்.

ஜீவஜோதியாகிய சூரியனிலேயே சிவ ஸ்வருபத்தைக் கண்டது இந்துமதம்.

வெப்பம் ஆண்மை மிக்கது, அதன் நிறம் சிவப்பு.

சிவபெருமானை "செம்மேனி எம்மான்", " பொன்னார் மேனியன்" என்றதும், "எரிதழல் கடவுள்", "செந்தழல்சிவபுரத்தரசன் என்றதும் இதனால்தான்.

மாலை நேரச் சூரியன் பரமசிவனின் உருவகம்.
செந்நிறம் பிரதிபலிக்கும் மேகங்களே சிவனின் செஞ்சடை.

சிவன் தலையிலுள்ள ஆகாச கங்கை என்பது, கடல் நீரை உறிஞ்சி உயரே அடக்கிக் கொண்டிருக்கும் மேகங்களின் திரட்சியே.

அந்திவானில் சூரியனின் அருகில் தோன்றும் இளம் பிறையே சிவனின் முடியில் துலங்குவதாக சித்தாந்தம்.

இயற்கையின் வடிவிலும் இறைவனைக் கண்டது இந்து மதம்.

வன்மையும் வெம்மையும் ஆண்மை என்றால், மென்மையும் தண்மையும் பெண்மை அல்லவா...

சூரியன் சிவம் என்றால், சந்திரனே சக்தி.

சந்திரனின் கிரகசக்தி பூமியில் பெண் பாலின் உயிர்த்தோற்றுவாய்க்கு ஆதாரமாக இருக்கிறது.

 நிலவொளியில் நீலநிற நுண்கதிர்களே அதிகமாக இருக்கின்றன.

பெண்மைக்கும் குளுமைக்கும் உரிய நிறம் நீலமே.

சக்தியாகிய உமாமகேஸ்வரியை ஸ்தோத்திரங்களும் புராணங்களும் நீலமேனி நங்கையாக வர்ணிப்பது இந்த அடிப்படையில்தான்.

உலகப் பொருள்களின் நிறங்கள் அத்தனையும் அடிப்படையான இந்த இரண்டு நிறங்களின் விகிதாச்சார சேர்க்கைகளே.

சர்வம் சிவசக்தி மயம்.

மின்சாரம் ஒன்றே என்றாலும் அது விளக்கை எரியவைக்கிறது, வானொலியை பாடவைக்கிறது, வாகனங்களை ஓட வைக்கிறது.

சக்தி ஒன்றே என்றாலும் அதற்குப் பலவிதமான பரிணாமங்கள் உண்டு.

அவற்றின் அர்த்தங்களை உள்ளடக்கியே, சக்திமயமான பராசக்தியை  உமா பார்வதி என்றும், துர்கையம்மன் என்றும், காளீஸ்வரி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும் பலவிதமாக வழிபாடு வகுத்தது இந்துமதம்.

சிவம் ஒன்றேயாயினும் அதற்குப் பலவிதமான பரிணாம நிலைகள் உண்டு.

அவற்றின் அர்த்தங்களை உள்ளடக்கியே நடராஜர் என்றும், உமாமகேஸ்வரன் என்றும், திருநீலகண்டன் என்றும், பிக்ஷாடனர் என்றும், தக்க்ஷிணாமூர்த்தி என்றும், ருத்திரதேவன் என்றும் பலவைதமாக சிவனை வழிபடுகிறது இந்துமதம்.

பரம் பொருளாகிய பிரம்மம்  நீர் ( அப்பு ),  நெருப்பு ( தேயு ),  காற்று ( வாயு ),  மண் ( ப்ருதிவி ),  வானம் ( ஆகாசம் ) ஆகிய  பஞ்ச பூதங்களிலும்
வியாபித்திருக்கிறது.

இதனை உணர்த்தவே சிவனுக்கு அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ப்ருத்விலிங்கம், ஆகாசலிங்கம் என்னும் திருநாமங்கள் தோன்றின. அவற்றிற்கான ஆலய ஸ்தலங்களும் வழிபடு முறைக்காக அமைக்கப்பட்டன.

லிங்கம் என்றால் குறி என்றும் சின்னம் என்றும் பொருள்.
இறைவனின் உருவைக் குறிக்கும் சின்னமே லிங்கம்.
கோயில்களில் எல்லாத் தெய்வங்களுக்கும் திருவுருவ விக்கிரகங்கள் இருக்க சிவபெருமானுக்கு மட்டும் லிங்கவடிவில் விக்ரகம் இருப்பது ஏன்?
இறைவன் உருவும் அருவும் அற்றவன் என்பதை உணர்த்தவே.

உருவம் என்றும் உர்வமற்ற அருவமென்றும் சொல்ல முடியாத வினோத வடிவமே சிவலிங்கம்.

அமைதியாய் இருந்து செய்யும் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம், மனத்தை ஒருநிலைப்படுத்திப் பரம்பொருளை அணுகுவதற்கு முதல்படி.

சிவாலயங்களின் தலைவாசலில் நெடுமூச்சு விடும் பசுரூபமான நந்தி அமைக்கப்பட்டது இதனை உணர்த்தவே.

நிலையாத் தன்மையுள்ள மானிடரின் இறுதி நிலையை நினைவுபடுத்தும் இடுகுறியே விபூதி.

எதையும் எரித்தால் சாம்பலாகும், சாம்பலைச் சுட்டால் எதுவாகும்?

அழியாத் தன்மை பெற்ற பரம்பொருளை குறிக்கவும் திரு நீறு
சிவச்சின்னமாயிற்று.

அப்பனாகிய சிவனுக்கு திருநீறு என்றால்,
அன்னையாகிய சக்தியின் சின்னம் குங்குமம்.
குங்குமம் கொலுவிருப்பதே மங்கலம்.
மஞ்சள் மிகக் குளிர்ச்சி, அது பெண்மையின் சின்னம்.

சுண்ணம் கொடும் உஷ்ணம்.  அது ஆண்மையின் அடையாளம்.
மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து உருவாவதே குங்குமம் என்பதால், சிவசக்தி ஐக்கியம் குங்குமத்திலும் உண்டு.

சிவத்தைத் தன்னிலிருந்து பிரிக்கவே முடியாதபடி குங்குமத் திலகமிட்டு நித்ய சுமங்கலியாய் வாழ்கிறாள் சக்தி.

" நமச்சிவாய" என்று கூப்பிடுங்கள். அது சக்திக்கும் கேட்கும்.

"ஓம் சக்தி" என்று  அழையுங்கள். அது சிவன் காதிலும் விழும்.

( புத்தகத்தின் தலைப்பு : பகுத்தறிவுள்ள இந்துமதம்
எழுத்து : விவேகா.
என் கையில் உள்ள பிரதி: மே 1983ம் ஆண்டின் 2ம் பதிப்பு.
இப்புத்தகத்தை முழுமையாக படித்து  பயன் பெற, அருகிலுள்ள புத்தகக் கடையினை  நாடுங்கள். அல்லது, தமிழ் நாட்டு புத்தக பிரசுரத்தாரை தொடர்பு கொள்ளுங்கள். அதற்கான சரியான கட்டணத்தை கட்டிவிட்டால், தபாலில் உடனே வந்து சேர்ந்து விடும். இது ஒரு பராசக்தி வெளியீடு. )